
அ.தி.மு.க உண்ணாவிரதப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்குப் பிரியாணி வரவழைக்கப்பட்டது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக-வினர் போராட்டத்தில் ஈடுபட்ட புகைப்படத்துடன் மாலை மலர் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “போராட்டத்தில் கைது ஆன எடப்பாடி ஆட்களுக்கு “யா மொய்தீன்” கடையில் இருந்து பிரியாணி வரவழைக்கப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை @Surya_BornToWin என்ற ட்விட்டர் ஐடி கொண்ட நபர் 2022 அக்டோபர் 19ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் முடிவெடுக்காததைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. முறையாக அனுமதி பெற்று போராட்டம் நடைபெற்றதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பிரியாணி வரவழைக்கப்பட்டது என்று மாலை மலர் செய்தி வெளியிட்டதாக சிலர் சமூக ஊடகங்களில் தகவல் பரப்பி வருகின்றனர்.
இந்த நியூஸ் கார்டு மாலை மலர் லோகோ கொண்டிருந்தாலும், சற்று வித்தியாசமாக இருந்தது. அதன் தமிழ் ஃபாண்ட் வழக்கமான மாலை மலர் நியூஸ் கார்டில் இருப்பது போல இல்லை. எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.
முதலில் மாலை மலர் இந்த நியூஸ் கார்டை வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கத்தைப் பார்வையிட்டோம். ஆனால், இப்படி எந்த ஒரு நியூஸ் கார்டையும் மாலை மலர் வெளியிடவில்லை என்பது தெரிந்தது.

மாலை மலர் வெளியிடும் நியூஸ் கார்டை எடிட் செய்து, எடப்பாடி பழனிசாமி போராட்டத்தில் ஈடுபட்ட படத்தை வைத்து, விஷமத்தனமான தகவலைச் சேர்த்து போலியாக இந்த நியூஸ் கார்டு உருவாக்கப்பட்டிருப்பது தெரிந்தது.
இந்த நியூஸ் கார்டை மாலை மலர் ஆசிரியர் குழுவுக்கு அனுப்பினோம். அவர்களும் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்தனர். இதன் அடிப்படையில் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அ.தி.மு.க-வினருக்கு பிரியாணி வரவழைக்கப்பட்டது என்று பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உண்ணாவிரத போராட்டத்தில் கைது செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி ஆட்களுக்கு பிரியாணி வரவழைக்கப்பட்டது என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:அதிமுக உண்ணாவிரதப் போராட்டத்தில் பிரியாணி வழங்கப்பட்டது என்று பரவும் செய்தி உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
