FACT CHECK: டெல்லி விவசாயிகள் பேரணி வீடியோ என்று பகிரப்படும் மகாராஷ்டிரா வீடியோ!

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

டெல்லியை மையம் கொண்டுள்ள விவசாயிகள் புயல் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

செங்கொடி ஏந்தியபடி ஆயிரக் கணக்கான விவசாயிகள் பேரணியாக செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டெல்லியை மையம் கொண்டுள்ள விவசாயிகள் புயல். #save_pujabfarmer” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை Kavi Arasu என்பவர் 2020 நவம்பர் 30ம் தேதி பகிர்ந்துள்ளார்.

Kavi Arasu-வைப் போல பலரும் இந்த வீடியோவை டெல்லியில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்த வீடியோ பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது 2020 நவம்பர் – டிசம்பரில் டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்புபடுத்தி சிலர் பகிர்ந்து வருகின்றனர். ஏற்கனவே, இந்த வீடியோவை பார்த்த நினைவு உள்ளதால் உண்மையில் இந்த வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளைப் புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம். 

அப்போது இந்த வீடியோ 2018ம் ஆண்டே யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது நமக்குத் தெரியவந்தது. 2018 ஏப்ரல் 3ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த அந்த மலையாள பதிவை மொழிமாற்றம் செய்து பார்த்தபோது, இந்த வீடியோ இமாச்சல பிரதேசத்தில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவில் தமிழில் பாடல் இருந்தது. ஆனால், நமக்கு கிடைத்த யூடியூப் வீடியோவில் இந்தியில் கோஷம் எழுப்புவதை கேட்க முடிந்தது. 

அசல் பதிவைக் காண: YouTube

அதே நேரத்தில் இதே போன்று பேரணி 2018ம் ஆண்டு மகாராஷ்டிராவில் நாக்பூரில் இருந்து மும்பை வரை நடத்தது என்றும் பல வீடியோக்கள் கிடைத்தன. நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவில் உள்ளவர்களின் உடையும் மகாராஷ்டிராவில் பேரணியாக சென்ற விவசாயிகள் என்று பகிரப்படும் வீடியோவில் உள்ளவர்களின் உடையும் ஒரே மாதிரியாக இருந்தது.

தற்போது டெல்லி நோக்கிச் சென்ற விவசாயிகள் பெரும்பாலும் சீக்கியர்களாகவே உள்ளனர். மற்றவர்களும் பங்கேற்றாலும், சீக்கியர்கள் அதிக அளவில் உள்ளனர். ஆனால் இந்த வீடியோவில் வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டை, தலையில் குல்லா என மகாராஷ்டிராவில் இருப்பவர்கள் போலவே இருந்தனர். சிங்குகள் ஒருவரையும் காணவில்லை.

நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோவில் பேரணியின் தொடக்கத்தில் வெள்ளை நிற ‘குட்டி யானை’ போன்ற வாகனத்தில் மைக் கட்டப்பட்டு செல்வதைக் காண முடிகிறது. அதே வாகனம் மகாராஷ்டிராவில் நடந்த பேரணியின் போதும் காண முடிகிறது.  மேலும் நமக்கு கிடைத்த யூடியூப் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்ட மார்ச் 2018ல் மகாராஷ்டிராவில் விவசாயிகள் பேரணி நடந்தது தொடர்பான செய்திகளும் நமக்கு கிடைத்துள்ளன.

அசல் பதிவைக் காண: firstpost.com I Archive

தற்போது டெல்லியில் நடந்து வரும் பேரணி, போராட்டம் என்பது 2020 செப்டம்பரில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து நடக்கிறது. 2018ம் ஆண்டே இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதன் மூலம் இது டெல்லி நிகழ்வின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியாகிறது.

நம்முடைய ஆய்வில்,

இந்த வீடியோ 2018ம் ஆண்டே சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது.

வேளாண் சட்டம் என்பது 2020 செப்டம்பரில்தான் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த வீடியோ 2018ம் ஆண்டு மகாராஷ்டிராவில் விவசாயிகள் நடத்திய பிரம்மாண்ட பேரணியின் போது எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.

இதன் அடிப்படையில் டெல்லியை மையம் கொண்ட விவசாயிகள் பேரணி என்று பகிரப்படும் வீடியோ தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2018ம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்த விவசாயிகள் பேரணி வீடியோவை 2020ல் டெல்லியில் நடந்த பேரணி என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பது தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:டெல்லி விவசாயிகள் பேரணி வீடியோ என்று பகிரப்படும் மகாராஷ்டிரா வீடியோ!

Fact Check By: Chendur Pandian 

Result: False