
இஸ்லாமிய பெண் ஒருவரை ஜெய் ஶ்ரீராம் என்று கோஷமிட வற்புறுத்தி இந்துத்துவ ஆதரவாளர்கள் தாக்கினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இஸ்லாமிய பெண்ணை ஆண் ஒருவர் தாக்குவது போலவும், அவரை மற்றவர்கள் தடுப்பது போலவும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த நபர் ஜெய் ஶ்ரீராம் கூறு என்று சொல்லித் தாக்குவது போல் உள்ளது. நிலைத் தகவலில், “இந்துத்துவா மதவெறி குண்டர்களால் ஒரு இளம் சிறுமியைத் தாக்கி, ‘ஜெய் சிரி ராம்’ என்று கோஷமிட வற்புறுத்தித் தாக்கப்படுகிறார்.
இதை எப்படிப் பொறுத்துக்கொள்ள முடியும்? ஆனாலும் எந்த நடவடிக்கையும் இல்லை, ஊடகங்களில் எந்த செய்தியும் வரவில்லை, எந்த அரசியல்வாதியிடமிருந்தும் ஒரு ட்வீட் கூட வரவில்லை.
இனி இந்த நாட்டில் முஸ்லிம் சிறுமிகள், இதுபோன்ற (குன்டர்களால்)கும்பல்களால் நடு வீதியில் எந்தவித பின்விளைவுகளும் இன்றி தடுத்து நிறுத்தப்பட்டுத் தாக்கப்படுவார்களா? நீதி எங்கே?” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்துத்துவா மத வெறி கொண்ட குண்டர்கள் இளம் இஸ்லாமிய சிறுமியைத் தாக்குகிறார்கள் என்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. எந்த இடம் என்று அதில் குறிப்பிடப்படவில்லை. சில பதிவுகளில் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு இந்த சம்பவம் நடந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோவை வங்கதேச ஊடகம் ஒன்று தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் 2025ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி பதிவிட்டிருந்தது. அதில், “இளம் பெண் ஒருவர் பணம் திருடும் போது கையும் களவுமாக சிக்கினார்.
அந்த பெண்ணின் பெயர் அனிகா. ஆயத்த ஆடை உற்பத்தி தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். மிர்பூர் கல்லூரி சந்தை (Mirpur College Market) பகுதி கடை ஒன்றில் அவர் பணத்தைத் திருடும்போது சிக்கினார். சம்பளம் போதுமானதாக இல்லாததால் இப்படி அவர் திருடிவிட்டதாக அவரது உறவினர்கள் கூறினர்” என்று இருந்தது.
அந்த வீடியோவில் அந்த பெண்ணை ஜெய் ஶ்ரீராம் கூறும்படி யாரும் வற்புறுத்தித் தாக்கவில்லை. பணம் திருடு தொடர்பாகவே அவரை தாக்கியதை காண முடிந்தது. இதன் மூலம் வங்கதேசத்தில் நடந்த திருட்டு சம்பவம் ஒன்றின் வீடியோவை எடிட் செய்து, ஆடியோவை மாற்றி தவறாக மதவெறுப்பை தூண்டும் வகையில் பதிவிட்டிருப்பது உறுதியாகிறது. இந்த ஆதாரத்தின் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு ஆடியோ எடிட் செய்யப்பட்டது, தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
வங்கதேசத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணை சிலர் தாக்கிய வீடியோவின் ஆடியோவை எடிட் செய்து ஜெய்ஶ்ரீராம் என்று கூறும்படி தாக்கப்பட்டார் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


