
திருப்பதியில் இளம் பெண்ணுடன் நடிகர் சிவகுமார் உல்லாசமாக இருந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
இணைய ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்துள்ளனர். அதில், “இளம் பெண்ணுடன் திருப்பதியில் உல்லாசம்… கைதாகிறாரா சிவகுமார்.? சென்னை விரைகிறது ஆந்திர போலீஸ்..!” என்று இருந்தது. மேலும் கூடுதலாக, “யோக்கியன் வேடம் கலைகிறது” என்று ஸ்டாம்ப் போன்று பதிவிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை இன்வெட்டர் ஆட்சி என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட பக்கம் 2021 அக்டோபர் 19ம் தேதி பதிவிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
திருப்பதி கோவிலுக்கு வரும் ஏழை, பணக்காரர்கள் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சிவக்குமார் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மீது திருப்பதி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
அசல் பதிவைக் காண: hindutamil.in I Archive 1 I indianexpress.com I Archive 2 I indiatoday.in I Archive 3
இந்த சூழலில், நடிகர் சிவக்குமார் இளம் பெண்ணுடன் திருப்பதியில் உல்லாசமாக இருந்தார் என்ற அர்த்தம் வரும் வகையில் பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரவே, அதிர்ச்சியாக இருந்தது. எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட செய்தியின் தலைப்பை கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது, இணையதள ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டிருப்பது தெரிந்தது. செய்தியின் உள்ளே பார்த்த போது, சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சிவக்குமார் பேசியதன் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்ட விஷயத்தைச் சொல்லியிருந்தனர்.

அசல் பதிவைக் காண: dinaseval.com I Archive
நடிகர் சிவக்குமார், “காட்பாடியிலிருந்து 48 நாள் விரதமிருந்து, நடந்தே திருப்பதி கோயிலுக்கு செல்கிறான் ஒரு ஏழை பக்தன். இவன் நீண்டவரிசையில் காத்திருந்து பின்னர் தான் சாமியை தரிசனம் செய்கிறான். அங்கு பெரிய மூங்கில் குச்சியில் ‘ஜரகண்டி.. ஜரகண்டி’ எனஅடித்து விரட்டுகிறார்கள். அதுவேஒரு பணக்காரன், மனைவிக்கு தெரியாமல் வேறு பெண்ணை அழைத்துக் கொண்டு திருமலைக்கு சென்று, விடுதி அறையில் தங்கி, மதுபோதையில் இருந்து விட்டு, காலையில் குளிக்காமல் கோயிலுக்குள் சென்றால், அவனுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது” என்று பேசியிருந்தார்.
திருப்பதியில் இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த பணக்காரர் யார் என்று சிவக்குமாரிடம் விசாரிக்க திருப்பதி போலீசார் வரலாம் என்று கூறப்படுகிறது. யார் அந்த பணக்காரர் என்று சிவக்குமார் கூறாமல், எதார்த்தமாகதான் பேசினேன் என்று கூறினால் அவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.
திருப்பதியில் பணக்காரர்கள் இளம் பெண்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு, சாமி தரிசனம் செய்கிறார்கள் என்று நடிகர் சிவக்குமார் கூறியது தொடர்பாக அவரிடம் திருப்பதி போலீசார் விசாரணை நடத்த உள்ளார்கள் என்பதுதான் செய்தியின் சாராம்சம். அதற்கு, சிவக்குமாரே உல்லாசமாக இருந்தது போன்று தோற்றம் அளிக்கும் வகையில் தலைப்பிட்டுள்ளனர். அந்த தலைப்பை மட்டும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூக ஊடகங்களில் பகிரும்போது, நடிகர் சிவக்குமார் உல்லாசமாக இருந்தார் என்ற அர்த்தத்தில் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

நம்முடைய ஆய்வில், பரபரப்புக்காக, அவதூறு பரப்பும் வகையில் “இளம்பெண்ணுடன் திருப்பதியில் உல்லாசம்… கைதாகிறாரா சிவகுமார்” என்று தலைப்பிட்டு செய்தி பகிரப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது. இந்த பதிவு விஷமத்தனமானது, தவறான அர்த்தத்தை, புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
நடிகர் சிவக்குமார் திருப்பதியில் இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்தது போலவும் அவரை கைது செய்ய ஆந்திர போலீசார் தமிழகம் வருகிறார்கள் என்ற அர்த்தத்தில் பரவும் பதிவு தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:திருப்பதியில் நடிகர் சிவக்குமார் உல்லாசமா?- விஷமத்தனமான வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: Misleading
