மைசூர் அருகே கடல் கன்னி தென்பட்டார் என்று பரவும் வீடியோ உண்மையா?

சமூக ஊடகம் | Social சமூகம் தொழில்நுட்பம்

மைசூர் அருகே ஶ்ரீரங்கபட்டினத்தில் காவிரி ஆற்றில் கடல் கன்னி தென்பட்டார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்அப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) ஃபேஸ்புக் இணைப்பை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். அந்த இணைப்பைத் திறந்து பார்த்த போது அது ஒரு வீடியோ பதிவு இருந்தது.

கடல் கன்னி ஒருவர் பாறை மீது அமர்ந்திருப்பது போலவும், பின்னர் பாறைகளுக்குள் தாவி தண்ணீருக்குள் மறைவது போலவும் வீடியோ இருந்தது. நிலைத் தகவலில், “கடல் கன்னி மைசூர் அருகே ஸ்ரீ ரங்கபட்டினத்தில்” என்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த வீடியோ பதிவை Trichi Swaminathan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜூலை 30ம் தேதி பதிவிட்டிருந்தார்.  அவர் மட்டுமின்றி, பலரும் இந்த வீடியோவை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கடல் கன்னி என்ற ஒன்று இருப்பதாக அவ்வப்போது போலியான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. கடல் கன்னி இருப்பதை இதுவரை அறிவியல் உலகம் உறுதி செய்யவில்லை. இந்த சூழலில், கர்நாடகாவில் காவிரி ஆற்றில் கடல் கன்னி தென்பட்டார் என்று குறிப்பிட்டு பலரும் பதிவிட்டு வருகின்றனர். கடல் கன்னி கடலிலிருந்து இவ்வளவு தூரம் காவிரி ஆற்றில் பயணித்து ஶ்ரீரங்கபட்டினம் வரை எப்படி வந்திருப்பார் என்று யோசித்திருந்தால் கூட இந்த பதிவை வெளியிட்டிருக்க மாட்டார்கள்.

இந்த வீடியோவை பார்க்கும் போது கம்ப்யூட்டர் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ போல உள்ளது. மேலும், வீடியோவின் ஒரு பகுதியில் JJPD என்று லோகோ இருப்பதைக் காண முடிந்தது. எனவே, கம்ப்யூட்டர் வடிவமைப்பு வீடியோவை உண்மையான கடல் கன்னி என்று கருதி பகிர்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம்.

வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது டிக்டாக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருவதை காண முடிந்தது. இவற்றுக்கு இடையே ஜெஜெபிடி ப்ரொடெக்‌ஷன் என்ற யூடியூப் பக்கத்தில் இந்த வீடியோ பகிர்ந்திருப்பது தெரிந்தது. அந்த வீடியோவை பார்த்தோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ பகுதி இடம் பெற்றிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: YouTube

அந்த வீடியோ பற்றிய தகவல் என்று ஸ்பானிஷ் மொழியில் பதிவிட்டிருந்தனர். இதை கூகுள் டிரான்ஸிலேட்டர் மூலம் மொழி மாற்றம் செய்து பார்த்தோம். குறிப்பு பகுதியில், “கடல் கன்னி கண்டுபிடிக்கப்பட்டார்” என்று குறிப்பிட்டிருந்தனர். அதன் கீழே, இந்த வீடியோ பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்டது. படங்கள் அனைத்தும் கற்பனையே. சிஜிஐ (Computer Generated Image) எனப்படும் கணினியில் உருவாக்கப்பட்ட 3டி வீடியோ என்று குறிப்பிட்டிருந்தனர்.

இதன் மூலம் கணினி மூலம் மூலம் உருவாக்கப்பட்ட சிறு வீடியோவை உண்மை என்று நம்பி, ஶ்ரீரங்கபட்டினம் காவிரி ஆற்றில் கடல் கன்னி கண்டுபிடிக்கப்பட்டார் என்று தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மைசூரில் கடல் கன்னி சிக்கினார் என்று பரவும் வீடியோ கம்ப்யூட்டர் முறையில் உருவாக்கப்பட்ட வீடியோ என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மைசூர் அருகே கடல் கன்னி தென்பட்டார் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False