
அடிமை திமுக அரசு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர் நந்தினி போஸ்டர் பிடித்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
சமூக செயற்பாட்டாளர் நந்தினி போஸ்டர் ஒன்றைப் பிடித்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “அடிமை திமுக அரசே! சாராயம் விற்றால்தான் ஆட்சி நடக்கும் என்றால் அப்படிப்பட்ட ஆட்சி தேவையில்லை. பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலைத் தகவலில், “தைரியமான பொண்ணு… #I_Stand_With_Nandhini_Anandan” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை வேலாயுதம் யாதவ் என்பவர் 2021 மே 6ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
பா.ஜ.க மற்றும் டாஸ்மாக் உள்ளிட்டவற்றுக்கு எதிராக மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் நந்தினி போராடி வருகிறார். தொடர்ந்து மதுக்கடை, பாரதிய ஜனதா கட்சி, மின்னணு வாக்குப்பதிவு முறை உள்ளிட்டவற்றை எதிர்த்து குரல்கொடுத்து வருவதால் அவரைப் பற்றி தொடர்ந்து பல அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன.
அ.தி.மு.க ஆட்சியில் மதுக்கடைகளுக்கு எதிராக போராடி வந்த நந்தினி, தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் மதுக்கடை உள்ளிட்ட விவகாரங்களைப் பற்றி பேசாமல் இருப்பதாகக் கூறி பலரும் பழைய படத்தைப் பதிவிட்டு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சிலர் அடிமை அ.தி.மு.க என்று இருந்ததை எடிட் செய்து அடிமை தி.மு.க என்று நந்தினி கூறியதாக குறிப்பிட்டு தி.மு.க அரசு பதவி விலக வேண்டும் என்று கூறியதாக பகிர்ந்து வருகின்றனர். இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை உறுதி செய்ய ஆதாரத்தைத் தேடினோம்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
நந்தினியின் ஃபேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்தோம். அப்போது, 2020ம் ஆண்டு மே 6ம் தேதி இந்த போஸ்டரை அவர் வெளியிட்டிருந்தது தெரிந்தது. அதில், “அடிமை அதிமுக அரசே! சாராயம் விற்றால்தான் ஆட்சி நடக்கும் என்றால் அப்படிப்பட்ட ஆட்சி தேவையில்லை. பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறு” என்று இருந்தது. இதை எடிட் செய்து விஷமத்தனமாகப் பகிர்ந்து வருவது உறுதியானது.

பல வலதுசாரி ஆதரவு ஃபேஸ்புக் பதிவர்கள் கூறுவது போல தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு டாஸ்மாக் கடை பற்றி நந்தினி வாயே திறக்காமல் உள்ளாரா என்று பார்த்தோம். சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, தி.மு.க ஆட்சி அமைக்கிறது என்று உறுதியான பிறகு மே 3ம் தேதி அவர் பதிவு வெளியிட்டிருந்தார்.
அதில், “பொறுப்பேற்கவுள்ள புதிய ஆட்சியாளர்களே, தமிழ்நாட்டை நாசமாக்கும் டாஸ்மாக்கை மூடுங்கள் ஊழல் செய்யாதீர்கள் இலவசம் வேண்டாம்” என்று குறிப்பிட்டு போஸ்டர் பிடித்த படத்தை வெளியிட்டிருந்தது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
மேலும், “நீங்கள் திமுக ஆதரவாளர் என்று கூறுகிறார்களே? நீங்கள் நடுநிலையானவர் என்று தெரியும்” என்று ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, “நாங்கள் நடுநிலையானவர்கள் அல்ல.. நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் இடையே நடக்கும் போரில் நடுநிலை என்பது ஏமாற்றுவேலை. நாங்கள் எப்போதும் நியாயத்தின் பக்கமே இருப்போம்” என்று குறிப்பிட்டிருந்ததை ஸ்கிரீன்ஷாட் எடுத்துப் பதிவிட்டிருந்தார். இதன் மூலம் திமுக ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று நந்தினியின் போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
நம்முடைய ஆய்வில், 2020ம் ஆண்டு அ.தி.மு.க அரசு பதவி விலக வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர் நந்தினி வெளியிட்ட போஸ்டரை எடிட் செய்து தி.மு.க பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியதாக விஷமத்தனமாக மாற்றி பதிவிட்டிருப்பது உறுதியாகிறது.
முடிவு:
நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:தி.மு.க அரசு பதவி விலக வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர் நந்தினி கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: Altered
