
ரூ.5, 10, 100 நோட்டுக்கள் திரும்பப் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததாக பல செய்தி மற்றும் பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I kumudam.com I Archive 2
“ரூ.5, ரூ.10, ரூ.100 விரைவில் திரும்பப் பெறப்படும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!” என்று குமுதம் இதழ் தன்னுடைய இணையதளத்தில் வெளியிட்ட செய்தி 2021 ஜனவரி 23ம் தேதி பகிரப்பட்டுள்ளது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
2016ம் ஆண்டு பண மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியிட்டது போல, ரூ.5, ரூ.10, ரூ.100 விரைவில் திரும்பப் பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் முன்னணி ஊடகங்கள் தினத்தந்தி, தினகரன் என அனைத்திலும் இந்த செய்தி வெளியாகி உள்ளது.
அசல் பதிவைக் காண: dinakaran.com I Archive 1 I dailythanthi.com I Archive 2
இந்த செய்தியில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று லிங்க்கை கிளிக் செய்து செய்தியைப் படித்தோம். அதில், “பெங்களூருவில் ஜில்லா பஞ்சாயத்திலுள்ள நேத்ராவதி மண்டபத்தில் மாவட்ட முன்னணி வங்கி ஏற்பாடு செய்திருந்த மாவட்ட அளவிலான பாதுகாப்புக் குழு (டி.எல்.எஸ்.சி) மற்றும் மாவட்ட அளவிலான நாணய மேலாண்மைக் குழு (டி.எல்.எம்.சி) கூட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேலாளர் பி மகேஷ் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் ரூ.100, ரூ.10, மற்றும் ரூ.5 உள்ளிட்ட பழைய தொடர் நாணயத்தாள்களை மத்திய வங்கி திரும்பப் பெற திட்டமிட்டுள்ளது. எனவே ரூ.100, ரூ.10 மற்றும் ரூ.5 என்ற பழைய நாணயத்தாள்கள் இறுதியில் புழக்கத்தில் இருக்காது என தெரிவித்துள்ளார்” என்று இருந்தது.
அதாவது “ரூ.5, 10, 100 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவது பற்றி மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது, ரிசர்வ் வங்கி அதிகாரி தகவல்” என்று தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெறுவது என முடிவு எடுத்து அறிவிப்பே வெளியிட்டது போன்று தவறான தலைப்பு வைத்திருப்பது தெரிந்தது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஏதும் அறிவிப்பு வெளியிட்டுள்ளதா என்று தேடினோம். அப்போது, “சில ஊடகங்கள் ரூ.100, ரூ.10, ரூ.5 நோட்டுக்களை திரும்பப் பெற உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன. இந்த செய்தி தவறானது என்பதை தெளிவுபடுத்துகிறோம்” என்று குறிப்பிட்டிருந்தனர்.
அதே நேரத்தில் சமூக ஊடகங்களில் பலரும் ரூபாய் நோட்டுக்களை அரசு திரும்பப் பெறப் போகிறது என்ற வகையில் பதிவிட்டு வருகின்றனர். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக நினைத்து பலரும் தவறான தகவலைப் பரப்பி வருவது தெரிந்தது.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
பழைய ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்ததாக பகிரப்படும் செய்தி மற்றும் சமூக ஊடக பதிவுகள் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
5, 10, 100 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி திரும்பப் பெறப் போவதாக பரவி வரும் தகவல் தவறானது என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title: ரூ. 5, 10, 100 நோட்டுக்கள் திரும்பப் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை!
Fact Check By: Chendur PandianResult: False
