FACT CHECK: யாஸ் புயல் ஒடிஷாவில் கரையை கடந்த போது எடுத்த வீடியோவா இது?

இந்தியா | India சமூக ஊடகம் | Social சமூகம்

ஒடிஷாவில் யாஸ் புயல் கரையைக் கடந்த போது மரம் ஒன்றை ஆறே விநாடிகளில் அடித்துச் சென்ற காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

புயலில் மரம் அடித்துச் செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஒரிசா பாலசூர் “யாஸ்” புயல் 6 நொடியில் மரத்தைக் கொண்டு செல்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Jayakumar Nachimuthu Jayakumar என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 மே 26ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

யாஸ் புயல் 2021 மே 26ம் தேதி ஒடிஷாவில் கரையைக் கடந்ததைத் தொடர்ந்து அது தொடர்பான செய்தி, வீடியோக்கள் சமூக ஊடகத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கின. 6 விநாடிகளில் மரத்தை அடித்துச் சென்ற புயல் என்று ஒரு பதிவு சந்தேகத்தை ஏற்படுத்தவே அது பற்றி ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளைப் புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் சரியான முடிவுகள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, yandex ரிவர்ஸ் இமேஜ் தேடலில் இந்த படங்களை பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ 2017ம் ஆண்டு யூடியூப் உள்ளிட்ட சில ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது.

2017ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த ஒரு ரஷ்ய மொழி பதிவை மொழி மாற்றம் செய்து பார்த்தோம். அதில், இம்ரா 5ம் நிலை புயலின் பாதிப்பு என்று குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: instagram.com I Archive

2017 செப்டம்பர் 6ம் தேதி வெளியான இன்ஸ்டாகிராம் பதிவிலும் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. அதிலும் இம்ரா புயல் பாதிப்பு என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இம்ரா புயல் எங்கு எப்போது தாக்கியது என்று கூகுளில் தேடினோம்.

இந்த புயல் அமெரிக்காவின் கிழக்கு கடலில் 2017ம் ஆண்டு உருவானது என்று தகவல் கிடைத்தது. இந்த புயல் 2017 ஆகஸ்ட் 30ம் தேதி உருவானது என்றும் செப்டம்பர் 14ம் தேதி வரை பாதிப்பை ஏற்படுத்தியது என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. 

தொடர்ந்து வேறு வேறு கீ வார்த்தைகளைக் கொண்டு தேடியபோது இந்த வீடியோ இம்ரா புயலின் போது எடுக்கப்பட்டது இல்லை என்றும் தெரிந்தது. இம்ரா புயல் வீசுவதற்கு ஒரு வருடத்துக்கு முன்பே இந்த வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதும் தெரிந்தது. ஆனால் இந்த வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்ற குறிப்பு இல்லை. இந்த வீடியோ இம்ரா புயலில் எடுக்கப்பட்டது இல்லை என்று 2017ல் வெளியான சில செய்திகளும் நமக்கு கிடைத்தன.

இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ 2016ம் ஆண்டில் இருந்து யூடியூபில் உலா வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஒடிஷாவில் யாஸ் புயலால் ஆறே விநாடியில் மரம் விழுந்தது என்று பகிரப்படும் வீடியோ தகவல் தவறானது என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஒடிஷாவில் யாஸ் புயல் கரையைக் கடக்கும்போது எடுத்தது என்று பகிரப்படும் வீடியோ 2016ம் ஆண்டில் இருந்து யூடியூபில் பகிரப்பட்டு வருவதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:யாஸ் புயல் ஒடிஷாவில் கரையை கடந்த போது எடுத்த வீடியோவா இது?

Fact Check By: Chendur Pandian 

Result: False