
டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக தி.மு.க நடத்திய உண்ணாவிரதத்தின் போது தொண்டர்கள் உணவு சாப்பிட்ட காட்சி என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அது தொடர்பான ஆய்வை மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
ஒதுக்குப்புறமான இடத்தில் சிலர் உணவு உட்கொள்ளும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தி.மு.கவின் உண்ணாவிரதப் போராட்டம் மாபெரும் வெற்றி, வெற்றி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை ந.முத்துராமலிங்கம் என்பவர் 2020 டிசம்பர் 18ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் தி.மு.க கூட்டணிக் கட்சிகள் சார்பில் 2020 டிசம்பர் 18ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த சூழலில், உண்ணாவிரதப் போராட்டம் வெற்றி என்று குறிப்பிட்டு பலரும் உணவு உட்கொள்ளும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. எனவே, இந்த புகைப்படம் தி.மு.க உண்ணாவிரதப் போராட்டத்தின் போது எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த புகைப்படம் 2018ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. 2020 ஏப்ரல் 3ம் தேதி இந்த புகைப்படத்தை தி நியூஸ் மினிட் என்ற இணைய ஊடகம் வெளியிட்டிருந்தது. “உண்ணாவிரதப் போராட்டத்தின் போது மதிய இடைவேளை: அ.தி.மு.க தொண்டர்கள் உட்கொண்டது பிரியாணியா தக்காளி சாதமா?” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர்.
அசல் பதிவைக் காண: thenewsminute.com I Archive
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க சார்பில் 2018 ஏப்ரல் 3ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே மதிய உணவு எடுத்துக்கொண்ட தொண்டர்கள் என்று அதில் குறிப்பிட்டிருந்தனர்.
2018 அ.தி.மு.க உண்ணாவிரதப் போராட்டத்தின் போது மதிய உணவு உட்கொண்ட, மது அருந்திய அ.தி.மு.க தொண்டர்கள் என்று ரிபப்ளிக் டி.வி வெளியிட்ட வீடியோவிலும் இந்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.
வேலூர் மட்டுமல்ல புதுக்கோட்டை, கோவை என தமிழகத்தின் பல பகுதிகளிலும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க தொண்டர்கள் உணவு உட்கொண்டார்கள் என்று நியூஸ்18 உள்ளிட்ட பல ஊடகங்களில் இந்த புகைப்படங்களுடன் செய்தி வெளியாகி இருந்தது.
அசல் பதிவைக் காண: news18.com I Archive
இதன் மூலம் 2018ம் ஆண்டு அ.தி.மு.க உண்ணாவிரத போராட்டத்தின் போது அ.தி.மு.க தொண்டர்கள் உணவு உட்கொண்ட படத்தை எடுத்து, தி.மு.க உண்ணாவிரத போராட்டத்தில் உணவு சாப்பிட்ட தி.மு.க-வினர் என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பது உறுதியாகிறது.
முடிவு:
இந்த புகைப்படங்கள் 2018ம் ஆண்டு அ.தி.மு.க-வினர் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தின் போது எடுக்கப்பட்டவை என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:தி.மு.க உண்ணாவிரதப் போராட்டம் என்று கூறி பகிரப்படும் அதிமுக.,வினர் படம்!
Fact Check By: Chendur PandianResult: False
