FACT CHECK: யோகி வருகைக்காக கேரளாவில் பா.ஜ.க தொண்டர்கள் உருவாக்கிய தாமரை படமா இது?

இந்தியா | India சமூக ஊடகம் | Social சர்வதேசம் | International

தேர்தல் பிரசாரத்துக்காக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கேரளா வந்த போது, தொண்டர்கள் தாமரை சின்னத்தை உருவாக்கினர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

ஆயிரக் கணக்கான பா.ஜ.க தொண்டர்கள் இணைந்து மேலிருந்து பார்க்கும் போது பா.ஜ.க-வின் தாமரை சின்னம் தெரிவது போன்ற நிற்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கேரளாவில் யோகி ஜியின் வருகையால் மக்கள் வெள்ளம் தாமரையாக மலர்ந்த காட்சி…….” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த படத்தை Rajiv என்பவர் 2021 பிப்ரவரி 21 அன்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்த பதிவில் யோகி ஆதித்யநாத் கேரளாவுக்கு எப்போது வந்தார் என்று குறிப்பிடவில்லை. இது தொடர்பாக தேடியபோது 2021 பிப்ரவரி 21ம் தேதி கேரளாவில் தேர்தல் பிரசாரத்துக்காக யோகி ஆதித்யநாத் வந்தார் என்று செய்தி கிடைத்தது. அந்த நிகழ்வின் போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம். அப்படி எதுவும் கிடைக்கவில்லை.

எனவே, படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். பாரதிய ஜனதா தொடங்கப்பட்ட தினத்தையொட்டி உருவாக்கப்பட்ட பா.ஜ.க மனித கொடி என்று சில செய்திகள் கிடைத்தன. இதன் அடிப்படையில் கூகுளில் வேறு வேறு கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம்.

அப்போது, 2015ம் ஆண்டு இந்த நிகழ்வு குஜராத் மாநிலத்தில் நடந்தது என்று புகைப்படத்துடன் செய்தி கிடைத்தது. 

பாரதிய ஜனதா கட்சியின் 35வது தொடக்க விழாவையொட்டி குஜராத் மாநிலம் தஹோத்தில் ஒரு கல்லூரி மைதானத்தில் மனிதர்கள் இணைந்து பா.ஜ.க கொடி உருவாக்கும் நிகழ்வு நடந்தது. இதை குஜராத் முதல்வர் ஆனந்தி பென் பார்வையிட்டார் என்று குறிப்பிட்டிருந்தனர்.

Archive

மேலும், இது தொடர்பாக பிரதமர் மோடி 2015ம் ஆண்டு வெளியிட்ட ட்விட் பதிவும் கிடைத்தது. அதில் அவரே ஒரு செய்தியின் இணைப்பை அளித்திருந்தார். அந்த செய்தியில் ஆனந்தி பென் மனித கொடியைப் பார்வையிட்டு பேசும் வீடியோவும் இருந்தது. 

அசல் பதிவைக் காண: deshgujarat.com I Archive 1 I indianexpress.com I Archive 2

இதன் மூலம் 2015ம் ஆண்டு குஜராத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தற்போது யோகி ஆதித்யநாத் கேரளா வந்தபோது எடுத்த படம் என்று தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

யோகி ஆதித்யநாத் கேரளா வந்த போது எடுத்த படம் என்று பகிரப்படும் படம் 2015ம் ஆண்டு குஜராத்தில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:யோகி வருகைக்காக கேரளாவில் பா.ஜ.க தொண்டர்கள் உருவாக்கிய தாமரை படமா இது?

Fact Check By: Chendur Pandian 

Result: False