
தற்போது கொரோனா பரவல் சூழலைப் போன்று 101 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ – சுகாதார சூழல் இருந்ததாகவும் எப்போது எடுக்கப்பட்ட படம் என்றும் சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவை உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
விதவிதமான மாஸ்க் அணிந்திருப்பது, ஆம்புலன்ஸ், மருத்துவமனைகள் போன்றவற்றின் பழங்கால படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “101 ஆண்டுகளுக்கு முன்பும் இது போன்ற ஒரு கால சூழ்நிலையில் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள்…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Meme creations Tamil என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Nasarboy என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் பகிர்ந்திருந்தார். ஆயிரக் கணக்கானோர் இதை ஷேர் செய்திருந்தனர்.
உண்மை அறிவோம்:
கொரோனா பரவல் இந்தியாவில் வேகம் எடுத்த நிலையில் சிலர் இந்த படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். இதில் சில படங்கள் உண்மையானவை என்பதாலும் ஒரு சிலரே இதைப் பகிர்ந்திருந்தனர் என்பதாலும் இதை அப்போது நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதே நேரத்தில் இலங்கையில் இந்த பதிவு வைரலாக பகிரப்படவே நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இலங்கை தமிழ்ப் பிரிவு இந்த படங்கள் பற்றி ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டிருந்தது.
இந்த சூழலில் தமிழகத்தில் இந்த புகைப்படங்கள் வைரலாக பகிரப்படவே இந்த படங்கள் பற்றிய ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்தோம். நம்முடைய இலங்கைப் பிரிவு உள்ளிட்ட பல ஃபேக்ட் செக் கட்டுரைகள் வெளியாகி இருந்த நிலையில், அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு நம்முடைய ஆய்வை தொடர்ந்தோம். ஒவ்வொரு படமாக ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடி, அவற்றின் மூலத்தை ஆராய்ந்தோம்.
முதலில் 101 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பெருந்தொற்று போன்ற சூழல் இருந்தது என்று குறிப்பிட்டுள்ளது. அப்போது என்ன இருந்தது என்பதை தெரிந்துகொள்வோம். 1918 முதல் 1920 வரை இரண்டு ஆண்டு காலத்துக்கு ஸ்பானிஷ் ஃப்ளூ பாதிப்பு இருந்தது. உலகம் முழுவதும் 50 கோடி பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டது. இவர்களில் 20 லட்சம் முதல் 50 லட்சம் வரை மக்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அப்போதும் பெருந்தொற்றைத் தவிர்க்க மக்கள் மாஸ்க் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு எச்சரிக்கையை மேற்கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட படங்கள் இவை என்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரவே நாம் ஆய்வு செய்தோம்.
முகத்தில் கோன் வடிவில் மாஸ்க் அணிந்திருக்கும் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த புகைப்படம் 1939ம் ஆண்டு கனடாவில் எடுக்கப்பட்டது என்று 2016ம் ஆண்டு வெளியான செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அங்கு மைனஸ் 4 டிகிரி அளவுக்கு குளிர் இருந்ததாகவும், 18 இன்ச் அளவுக்குப் பனிப்பொழிவு காணப்பட்டதாகவும் அப்போது இந்த கோன் வடிவ முக கவசத்தை மக்கள் பயன்படுத்தினார்கள் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த புகைப்படத்தை நெதர்லாந்து நாட்டின் ஆவணக் காப்பகம் தன்னுடைய இணைய தளத்தில் பதிவேற்றம் செய்திருப்பதும் தெரிந்தது. இதன் மூலம் இந்த புகைப்படம் பெருந்தொற்று காலத்தில் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியானது.

அசல் பதிவைக் காண: nationaalarchief.nl I Archive
இரண்டாவதாக இரண்டு பெண்கள் தொப்பி மற்றும் மாஸ்க் அணிந்து நடந்து வரும் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். கொரோனா பரவலுக்குப் பிறகு பலரும் இந்த படத்தை ஸ்பானிஷ் ஃப்ளூ காலத்தில் எடுக்கப்பட்டது என்று பதிவிட்டிருந்தனர். alamy.com என்ற புகைப்படம் விற்பனை தளத்தில் இந்த புகைப்படம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதில் இந்த புகைப்படம் 1913ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஸ்பானிஷ் ஃப்ளூ என்பது 1918ல் பரவியது.
அதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுவிட்டது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும், புதிய ஃபேஷன் என்று குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் இந்த புகைப்படத்துக்கும் பெருந்தொற்றுக்கும் தொடர்பில்லை என்பது உறுதியானது.

அசல் பதிவைக் காண: alamy.com I Archive
மூன்றாவதாக இரண்டு பெண்கள் மைக்கா கவர்களை கொண்டு தங்கள் முகத்தை மூடியிருக்கும் படம் எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். அந்த படம் அமெரிக்காவின் பிலடெல்பியாவில் 1953ம் ஆண்டு ஏற்பட்ட காற்று மாசு காரணமாக உருவான அடர் புகைமூட்டம் பிரச்னையை எதிர்கொள்ள இந்த பெண்கள் போர் காலத்தில் மிச்சமான கேஸ் கேப்ஸ்யூல்களை பயன்படுத்தினார்கள் என்று ஏபிஇமேஜஸ் தளத்தில் இந்த படம் கிடைத்தது. அதாவது ஸ்பானிஷ் ஃப்ளூவுக்கு 33 ஆண்டுகள் கழித்து இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது தெளிவாகிறது.

அசல் பதிவைக் காண: apimages.com I Archive
வேறு சில பதிவுகளில் விஷவாயு தடுப்பு மாஸ்க் அணிந்து குழந்தையை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக்கொண்டு செல்லும் படத்தை பதிவிட்டிருந்தனர். அந்த புகைப்படம் 1941ல் கிங்ஸ்டனில் திடீர் விஷவாயு கசிவின் போது எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: gettyimages.co.uk I Archive
அடுத்ததாக ஆம்புலன்ஸில் நோயாளியை ஏற்றும் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். gettyimages.in தளம் இந்த புகைப்படத்தை விற்பனைக்கு வைத்திருப்பது தெரிந்தது. இந்த புகைப்படம் 1918ம் ஆண்டு அமெரிக்காவின் மிசூரி செயின்ட் லூயிசில் எடுக்கப்பட்டது என்று தெரிந்தது. செஞ்சிலுவை சங்கத்தினர் ஃப்ளூ பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளியை ஆம்புலன்சில் ஏற்றுகின்றனர் என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதன் மூலம் இந்த புகைப்படம் ஸ்பானிஷ் ஃப்ளூ பெருந்தொற்று காலத்தில் எடுக்கப்பட்டது என்பது தெளிவானது. மற்ற படங்களை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடிய போது அவை ஃப்ளூ பெருந்தொற்று காலத்தில் எடுக்கப்பட்டவை என்பது தெரியவந்தது. இந்த படங்களை எல்லாம் ஒரே பக்கத்தில் சில ஊடகங்கள் பதிவிட்டிருந்தது நமக்குக் கிடைத்தன. இதன் அடிப்படையில் அவற்றைத் தனித் தனியாக நாம் ஆய்வு செய்யவில்லை.

அசல் பதிவைக் காண: gettyimages.in I Archive 1 I theatlantic.com I Archive 2
நம்முடைய ஆய்வில், ஃஸ்பானிஷ் ஃப்ளூ பெருந்தொற்று காலத்தில் எடுக்கப்பட்ட படங்களுடன் அதற்குத் தொடர்பில்லாத பல படங்களை சேர்த்துப் பதிவிட்டிருப்பது உறுதியாகிறது.
முடிவு:
101 ஆண்டுகளுக்கு முன்பு ஃப்ளூ பெருந்தொற்று கால காட்சி என்று பகிரப்படும் பதிவில் உள்ள படங்களில் பல பெருந்தொற்று காலத்தைச் சார்ந்தவையாகவும் சில அதற்கு தொடர்பில்லாததாகவும் இருப்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:101 ஆண்டுகளுக்கு முன்பு ஃப்ளூ பெருந்தொற்று காலத்தில் எடுத்த படங்களா இவை?
Fact Check By: Chendur PandianResult: Partly False
