FACT CHECK: தளர்வுகள் அற்ற ஊரடங்கையொட்டி வெளியூர் செல்ல அனுமதி அளித்த போது கோயம்பேட்டில் கூடிய கூட்டமா இது?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

தமிழக அரசு ஐந்து நாட்களுக்குத் தளர்வுகள் அற்ற ஊரடங்கை அறிவித்தது. இதைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அப்போது கோயம்பேட்டில் கூடிய கூட்டம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

பஸ் நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்ல அனுமதி தந்த ஸ்டாலின்க்கு நன்றி – #கொரோனா. 35000 நிச்சயம் ஒரு லட்சம் லட்சியம்…!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Orathi Anbarasu என்பவர் மே 22, 2021 அன்று பதிவிட்டுள்ளார்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

மோ.பிரசன்னா திருவாரூர் திருவாரூர் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் “இன்று கொரோனாவின் தொற்று பாதிப்பு 35 ஆயிரமாக உள்ளது. இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்ல இருக்கும் பயணிகள் கூட்டம்” என்று குறிப்பிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட உறுப்பினர்கள் அடங்கிய தமிழக சட்டமன்ற பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில் தமிழகத்தில் ஐந்து நாள் முழுமையான தளர்வுகள் அற்ற ஊரடங்கு மே 24ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி மே 22, 23ம் தேதிகளில் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால், தமிழகத்தில் கொரோனா தொற்று இன்னும் அதிகரிக்க வேண்டும் என்ற கொடூரமான ஆசையோடும் சிலர் பதிவிட்டு வருவது வேதனை அளிக்கும் வகையில் உள்ளது. அந்த வகையில் கொரோனா மரணம் ஒரு லட்சம் நிச்சயம் என்று கூறி ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் 2021ம் ஆண்டு மே மாதம் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம்.

படத்தைப் பார்க்கும்போது ஒரு சிலர் தவிர யாருமே மாஸ்க் அணியவில்லை. இவ்வளவு கவனக்குறைவாக இப்போதும் உள்ளார்களா என்ற சந்தேகத்தில் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த புகைப்படம் 2020ம் ஆண்டு மார்ச் மாதம் எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.

அசல் பதிவைக் காண: vikatan.com I Archive 1 I puthiyathalaimurai.com I Archive 2

இந்த புகைப்படத்தை விகடன் புகைப்பட கலைஞர் தே.அசோக்குமார் எடுத்திருந்ததாக விகடன் வெளியிட்டிருந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. மக்கள் வெள்ளத்தில் கோயம்பேடு” என்று தலைப்பிட்டு அப்போதே செய்தி வெளியிட்டிருந்தனர்.

2020ம் ஆண்டு தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி நடந்து வந்தது. அப்போது எடுத்த புகைப்படத்தை தற்போது எடுக்கப்பட்டது போல பகிர்ந்து, தி.மு.க-வை விமர்சித்து வருவதாக, தெளிவாகிறது.

நம்முடைய ஆய்வில் இந்த புகைப்படம் 2020 மார்ச் மாதம் எடுக்கப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 2021 மே 22ம் தேதி தமிழக அரசு அறிவித்த தளர்வின் போது கோயம்பேட்டில் கூடிய மக்கள் கூட்டத்தின் படம் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2021 மே 22ம் தேதி சொந்த ஊருக்கு செல்ல பொது மக்கள் அனுமதிக்கப்பட்டபோது கோயம்பேட்டில் கூடிய கூட்டம் என்று பகிரப்படும் படம் 2020ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:தளர்வுகள் அற்ற ஊரடங்கையொட்டி வெளியூர் செல்ல அனுமதி அளித்த போது கோயம்பேட்டில் கூடிய கூட்டமா இது?

Fact Check By: Chendur Pandian 

Result: False