தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையுறை அணிந்து குழந்தையைத் தூக்கியதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. குழந்தையைத் தொட கையுறை எதற்கு என்று கேள்வி எழுப்பி இந்த படத்தைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்த படம் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மு.க.ஸ்டாலின் குழந்தையைத் தூக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "குழந்தையை தொட கையுறை எதுக்கு?" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை தேசிய தமிழன் அண்ணாமலை என்ற ஃபேஸ்புக் பக்கம் 2023 ஜூலை 17ம் தேதி பதிவிட்டுள்ளது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தை ஒன்றைத் தூக்கும் போது கையுறை அணிந்து கொண்டு தூக்கியதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது நவீன தீண்டாமை என்றெல்லாம் குறிப்பிட்டு பலரும் இதை விமர்சித்து வருகின்றனர். இந்த புகைப்படத்தைப் பார்க்கும் போது கொரோனா தொற்று உச்சத்திலிருந்த காலத்தில் எடுக்கப்பட்டது போல இருக்கவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

2020 - 21ம் ஆண்டுகளில் உலகம் முழுக்க கொரோனா பெருந்தொற்று பாதிப்பு இருந்தது. பல மாதங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பொது மக்கள் அத்தியாவசிய தேவை தவிர்த்து மற்ற விஷயங்களுக்காக வெளியே செல்வது தடுக்கப்பட்டது.

முகத்துக்கு மாஸ்க், கைக்கு சானிடைசர், சமூக இடைவெளி என்று ஏராளமான கட்டுப்பாடுகள். மிகவும் பாதுகாப்புடன் வெளியே சென்று வந்த காலகட்டம் அது. அந்த காலகட்டத்தில் கையில் க்ளவுஸ் அணிந்து மு.க.ஸ்டாலின் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இந்த புகைப்படமும் அப்போது எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்ய இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.

2021 பிப்ரவரி 27ம் தேதி இந்த புகைப்படத்தை சன் நியூஸ் வெளியிட்டிருந்தது தெரிந்தது. அதில், காஞ்சிபுரம்:உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியின்போது கிளிக்கியது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Archive

2021 பிப்ரவரி இறுதியில் இந்தியாவில் கொரோனா பொருந்தொற்று அதிகரிக்கத் தொடங்கிய காலம். ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவும், நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சரியான சிகிச்சை கிடைக்காமலும் உயிரிழப்புகள் ஏற்பட்ட காலகட்டம் அது. அந்த காலகட்டத்தில்தான் தமிழ்நாடு சட்டமன்றத்துக்கான பொதுத் தேர்தலும் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக மு.க.ஸ்டாலின் கையில் கிளவுஸ் அணிந்திருந்தது அப்போது யாருக்கும் பிரச்னையாக தெரியவில்லை.

கொரோனா பரவலுக்கு முன்பு, பின்பு அவர் கையுறை அணியாமல் குழந்தைகளைத் தொட்ட, தூக்கிய புகைப்படங்கள் பல நமக்கு கூகுளில் தேடிய போது கிடைத்தன. அதே நேரத்தில் கொரோனா காலகட்டத்தில் அவர் கையுறையுடன் குழந்தைகளைத் தூக்கிய பல்வேறு படங்களும் கிடைத்தன.

இப்போது கொரோனா தொற்று பாதிப்பு அடங்கிய சூழலில், பழைய படங்கள் கூட சிலருக்குத் தீண்டாமையாகத் தெரிகிறது. எந்த சூழலில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்பதைத் தெரிந்திருந்தால் வதந்தி பரப்பியிருக்க மாட்டார்கள். நம்முடைய ஆய்வில் இந்த புகைப்படம் கொரோனா பெருந்தொற்று காலத்தில் எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்துள்ளோம். இதன் அடிப்படையில் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள தகவல் தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கொரோனா பரவல் காலத்தில் மு.க.ஸ்டாலின் கையில் கையுறை அணிந்து குழந்தையை தூக்கிய படத்தை இப்போது நடந்த்தது போன்று தவறாக பகர்ந்துள்ளதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:குழந்தையைக் கையுறையுடன் தொட்ட மு.க.ஸ்டாலின் புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது தெரியுமா?

Written By: Chendur Pandian

Result: False