FACT CHECK: மக்களின் வாழ்வை விட டாஸ்மாக் முக்கியமா என்று நடிகர் செந்தில் கேள்வி கேட்டாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

மக்களின் வாழ்க்கையை விட டாஸ்மாக் முக்கியமா என தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் செந்தில் கேள்வி எழுப்பியதாக ஒரு ட்வீட் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

காமெடி நடிகர் செந்தில் பெயரில் ட்விட்டர் பதிவு வெளியாகி உள்ளது. அதில், “மக்களின் வாழ்க்கையை விட டாஸ்மாக் முக்கியமா? தயவுசெய்து டாஸ்மாக்கை மூடிவிட்டு மக்களின் உயிரைக் காப்பாற்ற மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறோம். நன்றி!” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த பதிவை Ramesh Ramachandran என்பவர் 2021 ஜூன் 12ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ் திரைப்பட உலகின் காமெடி நடிகராக விளங்கிய செந்தில், டாஸ்மாக் கடைகளைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டதாக பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக நக்கீரன் உள்ளிட்ட ஊடகங்களிலும் கூட செய்தி வெளியாகி இருந்தது. சமீபத்தில் நடிகர் சார்லி பெயரில் ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டது. தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தி ட்விட்டர் அக்கவுண்ட் தொடங்கப்பட்டது என்று சார்லி போலீசில் புகார் அளித்திருந்தார்.

அசல் பதிவைக் காண: nakkheeran.in I Archive

இந்த சூழலில் நடிகர் செந்தில் புதிதாக ட்விட்டரில் பதிவிட்டது போன்று செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் தகவல் பரவவே அது பற்றி ஆய்வு செய்தோம். முதலில், தமிழ்த் திரைப்பட செய்திகளை பின்பற்றி வரும் ஊடக நண்பர்களிடம் இந்த பக்கம் உண்மையில் செந்திலுக்கு சொந்தமானதா என்று விசாரித்தோம். அவர்கள் செந்தில் சமூக ஊடக பக்கங்களில் இல்லை. இது பற்றிய தகவல் விரைவில் வெளியாகும் என்றனர்.

இதற்குள்ளாக முதலமைச்சரை டேக் செய்து தான் சொல்லாத கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருவதாக நடிகர் செந்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார் என்று செய்தி வெளியானது. 

அசல் பதிவைக் காண: polimernews.com I Archive

“டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிராகவும் அதை மூடச்சொல்லி முதல்வரைக் குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ளார்கள். எனக்கு இந்த விஷயமே தெரியாது. நானுண்டு என் வேலையுண்டு என்று போய்க்கொண்டு இருக்கிறேன். என்ன ஏது என்று எனக்குத் தெரியாது. ஒரு பத்திரிக்கை நண்பர் சொன்ன பிறகுதான் எனக்கு விஷயம் தெரிந்தது. அதன்பிறகு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தேன். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்றார்.

இதற்கிடையே நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ட்விட்டர் அக்கவுண்ட்டை தேடினோம். அந்த பக்கம் ட்விட்டரில் இருந்து அழிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் டாஸ்மாக் கடைகளை மூட நடிகர் செந்தில் ட்வீட் செய்தார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று நடிகர் செந்தில் கூறியதாக பரவும் ட்வீட் போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter

Avatar

Title:மக்களின் வாழ்வை விட டாஸ்மாக் முக்கியமா என்று நடிகர் செந்தில் கேள்வி கேட்டாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False