
பிரதமர் மோடி, டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் சந்திப்பின் போது சுற்றில் பிரிக்கப்படாத (அகண்ட) இந்தியா படம் இருந்தது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இந்திய பிரதமர் மோடி, டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் ஆகியோர் சந்தித்த புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. புகைப்படத்தில் இரண்டு நாட்டு பிரதமர்கள் பின்புறம் பிரிக்கப்படாத பழைய இந்தியாவின் வரைபடம் ஓவியமாக மாட்டப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “சுதந்திரம் அடைந்த மகிழ்ச்சியை கூட முழுமையாக அனுபவிக்க முடியாமல் துண்டாடப்பட்ட எங்கள் அகண்ட பாரதம்….மீட்டெடுத்து மீண்டும் அகண்ட பாரதம் ஸ்தாபிக்க உங்களை தவிற வேறோர் தலைவன் இல்லை ஜெய் மோடி சர்க்கார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை Sankar Gubenthiren Bjp என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 மே 4ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த படத்தை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இன்றைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மியான்மார், இலங்கை, நேபாளம், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைக் கொண்ட பிரிக்கப்படாத முழுமையான இந்தியா அமைய வேண்டும் என்பது தீவிர வலதுசாரிகளின் எண்ணமாக உள்ளது. அப்படி ஒரு நாட்டை பிரதமர் மோடி கட்டமைக்க உள்ளார் என்ற வகையில் ஒரு படத்தை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த புகைப்படம் உண்மையா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: ndtv.com I Archive
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, என்டிடிவி உள்ளிட்ட ஊடகங்களில் இந்த புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது. ஆனால், அந்த படங்களில் பிரிக்கப்படாத இந்தியாவின் ஓவியம் இல்லை. டென்மார்க் பிரதமர் கடந்த முறை இந்தியா வந்தபோது அவருக்கு பிரதமர் ஓடி ஒடிஷாவின் பட்டா சித்ரா என்ற ஓவியத்தைப் பரிசாக வழங்கினார். அந்த ஓவியம் டென்மார்க் பிரதமர் வீட்டில் மாட்டப்பட்டிருந்தது. டென்மார்க் பிரதமர் இல்லத்துக்குப் பிரதமர் மோடி சென்ற போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த தகவலை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்ற தகவலும் கிடைத்தது.
தர்மேந்திர பிரதான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த படத்தை, எடிட் செய்து அகண்ட பாரதத்தை அமைக்கப் போகும் பிரதமர் என்று தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதியானது. இதன் அடிப்படையில் இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று உறுதியாகிறது.

முடிவு:
பிரதமர் மோடி, டென்மார்க் பிரதமருடனான சந்திப்பின் போது சுவற்றில் அகண்ட பாரதம் ஓவியம் இருந்தது போன்று பரவும் படம் போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:மோடி, டென்மார்க் பிரதமர் சந்திப்பின்போது அகண்ட பாரதம் ஓவியம் இருந்ததா?
Fact Check By: Chendur PandianResult: Altered
