FACT CHECK: எனக்கு பயந்து வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றது என்று அன்புமணி கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

நாடாளுமன்றத்தில் எதிர்த்து குரலெழுப்ப இருப்பதை அறிந்துகொண்டு மத்திய அரசு எனக்கு பயந்து வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றிருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

அன்புமணி ராமதாஸ் புகைப்படத்துடன் தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “நாடாளுமன்றத்தில் வரும் குளிர்கால கூட்டத்தொடரில் நான் எதிர்த்து குரலெழுப்ப இருப்பதை அறிந்துகொண்ட மத்திய அரசு எனக்கு பயந்து முன்கூட்டியே வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றிருக்கிறது – அன்புமணி ராமதாஸ்” என்று இருந்தது.

இந்த பதிவை Allwin A என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 நவம்பர் 21ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஒரு ஆண்டுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த சூழலில் நவம்பர் 19, 2021 அன்று இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாகப் பிரதமர் மோடி அறிவித்தார். “தனக்கு பயந்து இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது” என்று அன்புமணி ராமதாஸ் கூறியதாக தந்தி டிவி நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

உண்மையில் அன்புமணி ராமதாஸ் இப்படிக் கூறியிருந்தால், அது மிகப்பெரிய செய்தியாக வந்திருக்கும். எந்த ஊடகங்களிலும் அப்படி எந்த ஒரு செய்தியும் இல்லை. ஆனால், இந்த நியூஸ் கார்டை பார்ப்பதற்கு கொஞ்சம் தந்தி டிவி வெளியிட்டது போலவே உள்ளது. தமிழ் ஃபாண்ட் வித்தியாசமாக உள்ளது. இதை பலரும் ஷேர் செய்யவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

முதலில் நவம்பர் 19ம் தேதி தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டுகளை எல்லாம் ஆய்வு செய்தோம். அப்போது, அன்புமணி ராமதாஸ் புகைப்படத்துடன் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற நியூஸ் கார்டு கிடைத்தது. ஆனால் அதில், “ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை சாதி பிரச்சினையோ, அரசியல் பிரச்சினையோ அல்ல இது ஒரு சமூகப் பிரச்சினை. பாரதிராஜாவுக்கு அன்புமணி கடிதம்” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: Facebook

இது குறித்து தந்தி டிவி ஆசிரியர் குழுவை தொடர்புகொண்டு கேட்டோம். அவர்களும் ‘’இந்த நியூஸ் கார்டு போலியானதுதான். நாங்கள் வெளியிடவில்லை,’’ என்று உறுதி செய்தனர். இந்த ஆதாரங்கள் அடிப்படையில், எனக்கு பயந்து மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றிருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறியதாக பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நான் எதிர்த்து குரலெழுப்ப இருப்பதை அறிந்து வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றது என்று அன்புமணி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:எனக்கு பயந்து வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றது என்று அன்புமணி கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False