மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கோவை ரயில், விமான நிலையங்கள் தனியார்மயம் ஆக்கப்படும், என்று அண்ணாமலை தேர்தல் வாக்குறுதி அளித்தார் என ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

அண்ணாமலை புகைப்படத்துடன் ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், "மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கோவை விமான நிலையம் மற்றும் ரயில் நிலையம் தனியார்மயம் ஆக்கப்படும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாக்குறுதி" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive

உண்மை அறிவோம்:

கோவை விமான நிலையம், ரயில் நிலையத்தை தனியாரிடம் கொடுப்போம் என்று தமிழ்நாடு பாஜக தலைவரும் கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கு பாஜக சார்பில் போட்டியிடுபவருமான அண்ணாமலை வாக்குறுதி அளித்ததாக சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். பார்க்க நியூஸ் கார்டு உண்மையானது போல இருப்பதால் இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

அண்ணாமலை அப்படி ஏதாவது வாக்குறுதி அளித்தாரா, தேர்தல் பிரசாரத்தில் பேசினாரா என்று அறிய கூகுளில் "கோவை விமான நிலையம் தனியார்மயம் - அண்ணாமலை உறுதி" என்று டைப் செய்து தேடினோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. எனவே, பாஜக நிர்வாகிக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பி இந்த தகவல் உண்மையா என்று கேட்டோம். அவரும் இது உண்மையில்லை என்று நம்மிடம் தெரிவித்தார்.

அடுத்ததாக இந்த நியூஸ் கார்டை ஜூனியர் விகடன் வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தை பார்த்தோம். ஏப்ரல் 6, 2024 அன்று ஜூனியர் விகடன் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று நியூஸ் கார்டை வெளியிடவில்லை. எனவே, அதன் டிஜிட்டல் பொறுப்பாளருக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பி வைத்தோம். அவரும் "இது ஜூனியர் விகடன் வெளியிட்டது இல்லை, போலியானது" என்று உறுதி செய்தார்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கோவை விமான நிலையம், ரயில் நிலையம் தனியார்மயம் ஆக்கப்படும் என்று அண்ணாமலை வாக்குறுதி அளித்ததாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் கோவை விமான நிலையம், ரயில் நிலையத்தை தனியார்மயம் ஆக்குவோம் என்று அண்ணாமலை வாக்குறுதி அளித்ததாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:‘கோவை ரயில், விமான நிலையம் தனியார் மயமாக்கப்படும்’ என்று அண்ணாமலை வாக்குறுதி அளித்தாரா?

Fact Check By: Chendur Pandian

Result: False