
சென்னை மழை, தி.மு.க-வுக்கு வாக்களித்த மக்களுக்கு வருணபகவான் அளித்த தண்டனை என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
IndiaGlitz Tamil ஊடகம் ட்விட்டரில் பதிவிட்ட அர்ஜூன் சம்பத் பேட்டி தொடர்பான செய்தி ஒன்றின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், “திமுக-வுக்கு வாக்களித்த சென்னை மக்களை, மழையின் வெள்ளத்தால் வருணபகவான் தான் தண்டித்துள்ளார். அவர்களுக்கு இது தேவைதான் – அர்ஜூன் சம்பத்” என்று இருந்தது.
இந்த பதிவை Gandhi Lakshmanan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 நவம்பர் 8ம் தேதி பதிவிட்டிருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
அரசியல்வாதிகள் மக்களை நேரடியாக விமர்சித்துப் பேசமாட்டார்கள். அப்படி இருக்கும்போது சென்னை மக்களுக்கு கிடைத்த தண்டனை என்று கூறியிருப்பது உண்மையானதாகத் தெரியவில்லை. எனவே, இந்த தகவல் உண்மையானதுதானா என்று ஆய்வு செய்தோம்.
IndiaGlitz தமிழ் ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தி வெளியானது போல் உள்ளது. எனவே, அதன் ட்விட்டர் பக்கத்தை பார்வையிட்டோம். முழுக்க முழுக்க சினிமா தொடர்பான செய்திகள் அதில் இருந்தன. அர்ஜூன் சம்பத் தொடர்பாக எந்த ஒரு பதிவும் நமக்கு கிடைக்கவில்லை. மேலும், இன்டியாகிளிட்ஸ் தமிழ் வெளியிடும் இது போன்ற பதிவுகளில் வீடியோ லிங்க் இருக்கும். ஆனால் அர்ஜூன் சம்பத் பதிவுக்கான வீடியோ லிங்க் இல்லை. நவம்பர் 5ம் தேதி ராசிபலன் தொடர்பான வீடியோவை வெளியிட்டிருந்தனர். அந்த வீடியோ பதிவை எடுத்து எடிட் செய்திருக்கலாம் என்று தெரிந்தது. எனவே, போலியாக இந்த பதிவை உருவாக்கியிருக்கலாம் என்பது தெரிந்தது.
அர்ஜூன் சம்பத் பேட்டி அளித்திருந்தால் அது தொடர்பான வீடியோ IndiaGlitz யூடியூப் பக்கத்தில் நிச்சயம் இருக்கும். எனவே, அதன் யூடியூப் பக்கத்தில் சென்று பார்த்தோம். சென்னை மழை வெள்ளம் தொடர்பாக அர்ஜூன் சம்பத்தின் பேட்டி எதையும் IndiaGlitz வெளியிடவில்லை என்று தெரியவந்தது. மேலும் அர்ஜூன் சம்பத் இப்படி கூறியதாக எந்த ஒரு செய்தியும், பதிவும், வீடியோவும் நமக்கு கிடைக்கவில்லை.

அர்ஜூன் சம்பத் இப்படி கருத்து தெரிவித்தாரா என்று அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தை பார்வையிட்டோம். அதில் அப்படி எந்த ஒரு கருத்தையும் அவர் பதிவிடவில்லை. எனவே, அர்ஜூன் சம்பத் தரப்பைத் தொடர்புகொண்டு விசாரித்தோம். அவர்களும் இது போலியாக உருவாக்கப்பட்ட பதிவு என்றும், அர்ஜூன் சம்பத் அப்படி எந்த ஒரு பேட்டியையும் அளிக்கவில்லை என்றும் உறுதி செய்தனர்.
இதன் அடிப்படையில் திமுக-வுக்கு வாக்களித்த மக்களை வருண பகவான் தண்டித்துள்ளார் என்று அர்ஜூன் சம்பத் கூறியதாகப் பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
திமுக-வுக்கு வாக்களித்த சென்னை மக்களுக்கு வருண பகவானின் தண்டனைதான் மழை வெள்ளம் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாக பரவும் பதிவு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:தி.மு.க-வுக்கு வாக்களித்த மக்களுக்கு வருண பகவான் தண்டனை என்று அர்ஜூன் சம்பத் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
