FACT CHECK: அதிமுக தோல்விக்குத் தகுதியற்ற தலைமைதான் காரணம் என்று சி.வி.சண்முகம் கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

அதிமுக தோல்விக்குத் தகுதியற்ற தலைமைதான் காரணம் என்று சி.வி.சண்முகம் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

ஏபிபி நாடு வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தல்களில் தொடர்ச்சியாக அஇஅதிமுக என்கிற பேரியக்கம் படுதோல்வி அடைந்திருப்பதற்கு தகுதியற்ற தலைமையே காரணம் – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்” என்று இருந்தது.

இந்த நியூஸ் கார்டை Elavarasan Thanigai Mani என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 அக்டோபர் 18 அன்று பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சசிகலாவை மிகக் கடுமையாக எதிர்த்து வருபவர்களுள் ஒருவர் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். அவர் அ.தி.மு.க-வின் கூட்டுத் தலைமைக்கு எதிராகக் கருத்து கூறியது போன்று நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

அசல் பதிவைக் காண: Facebook 

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டின் தமிழ் ஃபாண்ட் ஏபிபி நாடு வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போல இல்லை. மேலும், டிசைனில் சிறு வேறுபாட்டையும் காண முடிந்தது. எனவே, அக்டோபர் 12, 2021 அன்று வெளியான ஏபிபி நாடு நியூஸ் கார்டுகளை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்வையிட்டோம். அதில், எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு எதுவும் இல்லை. இதன் மூலம் இது போலியானதாக இருக்கலாம் எனத் தெரிந்தது.

இதை உறுதி செய்ய ஏபிபி நாடு ஆசிரியர் மனோஜை தொடர்புகொண்டு கேட்டோம். அவர், “இந்த நியூஸ் கார்டு நாங்கள் வெளியிட்டது இல்லை. போலியானது” என்று உறுதி செய்தார். 

சி.வி.சண்முகம் சமீபத்தில் அ.தி.மு.க தலைமை பற்றி ஏதும் பேசினாரா என்று பார்த்தோம். அப்போது அக்டோபர் 18 அன்று சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சி.வி.சண்முகம் பேசியது நமக்குக் கிடைத்தது. அதில், அ.ம.மு.க-வையே காப்பாற்ற முடியாதவர், அ.தி.மு.க-வை காப்பாற்றுவாரா என்று சசிகலாவை விமர்சித்து சி.வி.சண்முகம் பேசியிருப்பது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: abplive.com I Archive

வேறு எங்காவது ஏதாவது பேசினாரா என்று அறிய அ.தி.மு.க மூத்த தலைவர் ஒருவரைத் தொடர்புகொண்டு பேசினோம். சி.வி.சண்முகம் கூறியதாக பரவும் தகவல் தவறு என்று கூறிய அவர், அ.தி.மு.க எம்.எல்.ஏ-வும் கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளருமான அருள்மொழிதேவன் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதிப்படுத்திப் பதிவிட்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் அருள்மொழிதேவன் ட்விட்டர் பக்கத்தை பார்வையிட்டோம். அப்போது, இந்த நியூஸ் கார்டு போலியானது என்று குறிப்பிட்டு அவர் பதிவிட்டிருப்பது நமக்குக் கிடைத்தது.

Archive

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், அதிமுக என்கிற பேரியக்கம் படுதோல்வி அடைந்திருப்பதற்குத் தகுதியற்ற தலைமையே காரணம் என்று சி.வி.சண்முகம் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அ.தி.மு.க-வின் தொடர் தோல்விக்கு தகுதியற்ற தலைமையே காரணம் என்று சி.வி.சண்முகம் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன்  ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அதிமுக தோல்விக்குத் தகுதியற்ற தலைமைதான் காரணம் என்று சி.வி.சண்முகம் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False