
பிரான்சில் யூதர் ஒருவர் கையில் இஸ்ரேல் கொடியை பிடித்துக்கொண்டு குரானை காலில் போட்டு மிதித்து அவமரியாதை செய்தார் என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இஸ்ரேல் கொடியை கையில் பிடித்தபடி, குரானை மிதித்தபடி போராட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரின் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “யூதன் ஒருவன் இஸ்ரேலிய கொடியை பிடித்து கொண்டு குர்ஆனை காலில் வைத்து மிதிக்கிறான் இதெல்லாம் பிரான்சில் சட்டப்பூர்வமானது….. அல்லாஹ் யூதனை நாசமாக்குவாயாகயா…. 🤲 ஆமீன்… ✨” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவானது 2023 அக்டோபர் 25ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இஸ்ரேல் – ஹமாஸ் போர் நடந்து வரும் சூழலில் இஸ்ரேல் கொடியோடு இஸ்லாமியர்களின் புனித நூலை காலில் மிதித்தபடி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ அதிர்வை ஏற்படுத்தியது. வீடியோவில் இருப்பவர் யூதர் என்றும் இந்த சம்பவம் பிரான்சில் நடந்தது என்றும் குறிப்பிட்டிருந்தனர். பிரான்சில் ஏற்கனவே இஸ்லாமியர்களால் மோதல் ஏற்பட்டு வரும் சூழலில் அந்நாட்டு போலீஸ் எப்படி அனுமதித்ததா என்ற சந்தேகத்துடன் இந்த வீடியோவை ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சியைப் புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த சம்பவம் ஸ்வீடன் நாட்டில் நடந்தது என்று சில சமூக ஊடக பதிவுகள் கிடைத்தன. அதன் அடிப்படையில் தொடர்ந்து தேடினோம். அப்போது, ஈராக்கிலிருந்து ஸ்வீடனுக்கு அகதியாக சென்ற சல்வான் மோமிகா (Salwan momika) என்ற நபர் இந்த செயலை ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரில் அக்டோபர் 21, 2023 அன்று மேற்கொண்டார் என்று செய்திகள் கிடைத்தன.

உண்மைப் பதிவைக் காண: iqna.ir I Archive
சல்வான் மோமிகா தன்னுடைய எக்ஸ் (ட்விட்டர்) தளத்திலும் கூட இந்த வீடியோவை பதிவிட்டிருந்தார். அது மட்டுமின்றி சில மாதங்களுக்கு முன்பு குரானை எரிக்கப்போவதாக அவர் அறிவிப்பை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியதும் தெரியவந்தது. குரானை எரிப்பது போன்ற பதிவுகளை அவர் தன்னுடைய சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டிருப்பதைக் காண முடிந்தது. மீண்டும் குரானை எரிக்கப்போவதாக அவர் அறிவிப்பு வெளியிட்டிருப்பதையும் காண முடிந்தது.
யார் இந்த சல்வான் மோமிகா என்று தேடிப் பார்த்தோம். ஈராக்கின் போராளி குழு ஒன்றின் தலைவராக இருந்துள்ளார். தன்னை அவர் நாத்திகர் என்று தன்னுடைய சமூக ஊடக பக்கங்களில் குறிப்பிட்டுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் பல ஊடகங்கள் இவர், ஈராக்கின் மோசுல் பகுதியை சார்ந்த கிறிஸ்தவர் என்று செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் கொடியுடன் குரானுக்கு அவமரியாதை செய்யப்பட்ட சம்பவம் நடந்தது உண்மைதான்… ஆனால் அந்த நபர் யூதர் அல்ல, மேலும் இந்த சம்பவம் பிரான்சில் நடக்கவில்லை ஸ்வீடனில் நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் உண்மையுடன் வதந்தியும் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது.
முடிவு:
பிரான்சில் யூதர் ஒருவர் இஸ்ரேல் கொடியுடன் குரானை மிதித்து அவமரியாதை செய்தார் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:பிரான்சில் குரானை அவமரியாதை செய்த யூதர் என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult:Partly False
