பெட்டிக் கடையில் வைத்திருந்த டீ, வடை, சிகரெட் பாக்கி தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததாக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்வோம் என்று அதே அறிவிப்பை மு.க.ஸ்டாலின் வெளியிட்டதாக போலியான நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

உண்மை அறிவோம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive I Archive 2

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டு வருகிறது. அதில், "பெட்டிக் கடையில் வைத்திருந்த டீ, வடை, சிகரெட் பாக்கி அனைத்தும் தள்ளுபடி. - முதல்வர் பழனிசாமி" என்று இருந்தது.

இந்த நியூஸ் கார்டை மணிமாறன் என்பவர் 2021 பிப்ரவரி 26ம் தேதி பதிவிட்டிருந்தார்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

இதே நியூஸ் கார்டில் மு.க.ஸ்டாலின் படத்துடன் சிலர் பதிவிட்டு வருகின்றனர். அதில், "பெட்டிக் கடையில் வைத்திருந்த டீ, வடை, சிகரெட் பாக்கி அனைத்தும் 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வைத்தால் தள்ளுபடி செய்யப்படும் - தி.மு.க தலைவர் ஸ்டாலின்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை Prabhakaran Bjp என்பவர் 2021 பிப்ரவரி 28 அன்று பகிர்ந்துள்ளார். இதையும் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதான மாநில கட்சிகளான அ.தி.மு.க, தி.மு.க இரண்டும் இலவச அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. கடன் தள்ளுபடியும் அதில் அடக்கம். இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கிண்டல் செய்யும் வகையில் சிலர் சமூக ஊடகங்களில் பெட்டிக் கடையில் வைத்திருந்த டீ, வடை, சிகரெட் பாக்கி அனைத்தும் தள்ளுபடி என்று மட்டும்தான் அறிவிக்கவில்லை என்று பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு வருவதாக கூறி பதிவுகளை ஷேர் செய்திருந்தனர்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

கேலி, கிண்டல், நையாண்டி வகையாக பதிவிட்டிருந்தது கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் அடைந்து உண்மையானது போல பலரும் பகிர்ந்து வருவதைக் காண முடிகிறது. எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.

முதலில், புதிய தலைமுறையில் வெளியான அசல் நியூஸ் கார்டை தேடினோம். புதிய தலைமுறை ஃபேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்தபோது, பிப்ரவரி 26, 2021 அன்று வெளியான அசல் நியூஸ் கார்டு கிடைத்தது.

அதில், "கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 6 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி - முதல்வர் பழனிசாமி" என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்து தவறான தகவல் சேர்த்திருப்பது உறுதியானது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

இதை மேலும் உறுதிபடுத்த, புதிய தலைமுறை தொலைக்காட்சி டிஜிட்டல் பிரிவு நிர்வாகி மனோஜைத் தொடர்புகொண்டு பேசினோம். முதல்வர் பழனிசாமி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் என இருவர் பெயரிலும் பரவும் நியூஸ் கார்டுகள் போலியானது என்று தெரிவித்தார். இதன் அடிப்படையில் இந்த இரண்டு நியூஸ் கார்டுகளும் போலியானது, இதை வாசகர்கள் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

முடிவு:

பெட்டிக்கடை பாக்கி தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் பழனிசாமி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாக பகிரப்படும் நியூஸ் கார்டுகள் போலியானவை என்பதைத் தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பெட்டிக் கடை பாக்கி தள்ளுபடி என அறிவிப்பு!– நையாண்டி என்று கூட தெரியாமல் பரவும் போலிச் செய்தி!

Fact Check By: Chendur Pandian

Result: Altered