FACT CHECK: தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றாரா? – நியூஸ் 7 ட்வீட்டால் வந்த குழப்பம்

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்றதாக நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

எடப்பாடி பழனிசாமி படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் – 2021 தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதியில் வெற்றி” என்று இருந்தது.

இந்த பதிவை அஇஅதிமுக. எடப்பாடி வடக்கு ஒன்றியம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Ram என்பவர் 2021 மே 3ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. 234 தொகுதியிலும் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் அனைத்தும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு ஊடகமும் செய்தி வெளியிட்டு வருகின்றன. தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஐ.பெரியசாமி வெற்றி பெற்றார் என்று செய்தி வெளியாகி இருந்தது.

Archive

இந்த சூழலில் தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றதாக சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருவதைக் காண முடிந்தது. எனவே இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். இந்த நியூஸ் கார்டு அசலானது போலவே உள்ளது. எனவே, இது உண்மையில் நியூஸ் 7 தமிழ் வெளியிட்டதுதானா என்று பார்த்தோம்.

அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த நியூஸ் கார்டு நமக்குக் கிடைக்கவில்லை. ட்விட்டர் பக்கத்தில் தேடியபோது இந்த நியூஸ் கார்டு கிடைத்தது. இதன் மூலம் இந்த நியூஸ் கார்டு போலியாக உருவாக்கப்பட்டது இல்லை என்பது உறுதியானது.

Archive

அடுத்ததாக தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார் என்று ஆய்வு செய்தோம். இது தொடர்பாக தேடிய போது புதிய தலைமுறை வெளியிட்ட செய்தி நமக்குக் கிடைத்தது. அதில், தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஐ.பெரியசாமி வெற்றி பெற்றார் என்று குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

ஆத்தூர் தொகுதியில் ஐ.பெரியசாமி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ம.க வேட்பாளர் திலகபாமாவை விட 1,35,571 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு அடுத்த இடத்தில் திருவண்ணாமலையில் போட்டியிட்ட எ.வ.வேலு உள்ளார். அவர் 94,673 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். மூன்றாவதாக பூந்தமல்லி தொகுதியில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி 94,110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். நான்காவதாக எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க-வின் சம்பத்குமாரைக் காட்டிலும் 93,802 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார் என்று இருந்தது.

புதிய தலைமுறை செய்தி நமக்கு கிடைத்தாலும், இதை இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவு அறிவிப்பு பக்கத்தைப் பார்த்தோம். எடப்பாடி தொகுதியில் பழனிசாமி 1,63,154 வாக்குகள் பெற்றிருந்தார். இது 65.97 சதவிகிதம் ஆகும். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் சம்பத்குமார், 69,352 வாக்குகள் பெற்றிருந்தார். இது 28.04 சதவிகிதம் ஆகும்.

அசல் பதிவைக் காண: results.eci.gov.in I Archive

அடுத்ததாக, திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் ஐ.பெரியசாமி பெற்ற வாக்குகளை ஆய்வு செய்தோம். அவர் 1,65,809 வாக்குகள் பெற்றிருந்தார். இது 72.11 சதவிகிதம் ஆகும். இரண்டாவதாக வந்த பா.ம.க-வின் திலகபாமா 30238 வாக்குகளைப் பெற்றிருந்தார். இது 13.15 சதவிகிதம் ஆகும். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தமிழகத்திலேயே அதிக வாக்குகள் பெற்றார் என்றோ, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் எனக் கூற முடியாது என்பது தெளிவாகிறது.

அசல் பதிவைக் காண: results.eci.gov.in I Archive

தேர்தல் முடிவுகள் எல்லாம் வருவதற்கு முன்னதாகவே நியூஸ்7 தமிழில் தவறான தகவல் வெளியாகி உள்ளது. நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டு என்பதால் பலரும் இதைப் பகிர்ந்து வருவதைக் காண முடிகிறது. அதே நேரத்தில் நம்முடைய ஆய்வில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலின் முதல் இடத்தில் எடப்பாடி பழனிசாமி இல்லை. அந்த பட்டியலில் 4வது இடத்தில்தான் அவர் உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஐ.பெரியசாமி வெற்றி பெற்றார் என்பது தகுந்த ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் எடப்பாடி பழனிசாமி என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றதாக பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றாரா? – நியூஸ் 7 ட்வீட்டால் வந்த குழப்பம்

Fact Check By: Chendur Pandian 

Result: False