
‘’சிங்கார சென்னை,’’ என்ற தலைப்பில், 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் சென்னையில் உள்ளதாகக் கூறி, ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
Aashiq என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், சென்னை கத்திப்பாரா மேம்பாலம், டைடல் பார்க், வள்ளுவர் கோட்டம், செம்மொழி பூங்கா, அண்ணா நூற்றாண்டு நூலகம், மெட்ரோ, கோயம்பேடு பேருந்து நிலையம், சிஎம்பிடி பழ மற்றும் பூ மார்க்கெட் உள்ளிட்டவற்றின் புகைப்படங்களை பகிர்ந்து, அதன் நடுவே 133 அடி உயர திருவள்ளுவர் சிலை புகைப்படமும் பதிவிடப்பட்டுள்ளது.
உண்மை அறிவோம்:
ஜூன் 3ம் தேதி கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சமூக ஊடகங்களில் திமுக ஆதரவாளர்கள் பலரும் கருணாநிதியை வாழ்த்தியும், அவர் செய்த சாதனைகளை நினைவுகூர்ந்தும் விதவிதமான பதிவுகளை வெளியிட்டனர். இதன்படியே, நாம் ஆய்வு செய்யும்
ஃபேஸ்புக் பதிவும் வெளியாகியுள்ளது.
மேலோட்டமாகப் பார்த்தால், இவை எல்லாம் சென்னையில் உள்ளதாகவே தோன்றும். ஆனால், திருவள்ளுவர் சிலை மட்டும் கன்னியாகுமரியில் உள்ளது. இதுபுரியாமல், சிங்கார சென்னை என்ற தலைப்பிட்டு, இப்பதிவை மேற்கண்ட நபர் வெளியிட்டிருக்கிறார்.
கருணாநிதியின் சாதனைகள் இவை என்று கூறியிருந்தால், ஓரளவு பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால், மொட்டையாக, சிங்கார சென்னை என தலைப்பிட்டு, திருவள்ளுவர் சிலையையும் சேர்த்து பதிவிட்டுள்ளதால்தான், இந்த பதிவு மீது பிரச்னை வருகிறது.
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம்பிடித்துள்ள திருவள்ளுவர் சிலை எங்கே உள்ளது என்ற விவரம் அறியாதவர்களுக்கு கீழே விவரம் தரப்பட்டுள்ளது.
இப்படி கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை சிங்கார சென்னையில் உள்ளதாகக் கூறி புகைப்படம் பதிவிட்டுள்ளது, தவறாகிறது. இதுதவிர, இவை அனைத்தும் கருணாநிதியின் சாதனைகள் எனக் கூறும்போது,
மெட்ரோ ரயில் திட்டம் பற்றிய தகவல் இடிக்கிறது.
ஆம், அந்த திட்டப் பணிகள் திமுக ஆட்சியில் பெரும் இழுத்தடிப்பில் இருந்த நிலையில், அதனை முழு வேகத்தில் நிறைவேற்றியது அதிமுக அரசுதான். இதனால், அந்த திட்டத்திற்கு கருணாநிதிதான் முதற்காரணம் என்று சொல்லிவிட முடியாது. இதுதொடர்பாக, அதிமுகவும், திமுகவும் மாறி மாறி உரிமை கோரி வரும் நிலையில், குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவு மேலும் சர்ச்சையை ஏற்படுத்துவதாக உள்ளது. இதுபற்றி தி இந்து தமிழ் திசை வெளியிட்ட விரிவான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
எனவே, இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில், பாதி உண்மை, பாதி தவறான தகவல் இடம்பெற்றுள்ளதாக, முடிவு செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில், பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:திருவள்ளுவர் சிலை சிங்கார சென்னையில் உள்ளது: ஃபேஸ்புக் பதிவால் வந்த சர்ச்சை
Fact Check By: Parthiban SResult: Mixture
