
‘’ஆசிபா கொலையாளிகள் விடுதலை,’’ என்ற தலைப்பில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Rosy S Nasrath என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ஆசிபா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்படடுள்ள நபர்களின் புகைப்படங்களை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ஆசிபா கொலையாளிகள் விடுதலை ஆசிபா இன்று மீண்டும் வேட்டையாடப்பட்டாள். தேவிஸ்த்தான் எனப்படும் அந்த பெண் கடவுள் கோவிலின் பூசாரி சஞ்சிராம் உட்பட எட்டுபேரும் , போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் இன்று விடுவிக்கப்பட்டனர். இந்தியா பெண்களை தாயாக மதிக்கும் நாடு. நம்பிடுங்க,’’ என்று எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கடந்த 2018ம் ஆண்டில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்வா பகுதி அருகே உள்ள ரசானா கிராமத்தைச் சேர்ந்த ஆசிபா பனோ என்ற 8 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகப் புகார் எழுந்தது. 2018, ஜனவரி 10ம் தேதி முதல் சிறுமியை காணவில்லை என அவரது தந்தை போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில், தீவிர விசாரணை நடத்திய போலீசார், 2018 ஜனவரி 17 அன்று சிறுமியின் சடலத்தை கண்டுபிடித்தனர். பிரேத பரிசோதனையில், பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்தை நெரித்து சிறுமி கொலை செய்யப்பட்ட விவரம் தெரியவந்தது. அத்துடன், சிறுமியின் தலையில் கல்லால் கடுமையாக தாக்கிய தடயமும் இருந்தது.
இதையடுத்து, அப்பகுதியில் உள்ள தேவஸ்தான் என்ற கோயில் பூசாரி சஞ்சி ராம் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில், 4 பேர் போலீஸ் அதிகாரிகள் ஆவர். தேவஸ்தான் கோயில் உள்ளே சிறுமியை ஒரு வாரமாக அடைத்து வைத்து, பலமுறை இவர்கள் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, இறுதியாக அடித்துக் கொன்றதாக, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. டிஎன்ஏ பரிசோதனையில் இந்த குற்றச்சாட்டு உறுதியானதை தொடர்ந்து, வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தில் உள்ளது. எந்நேரம் வேண்டுமானாலும் இறுதித் தீர்ப்பு வழங்கப்படலாம் எனக்கூறப்படுகிறது. ஆசிபா வழக்கு பற்றி விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இந்நிலையில்தான், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இது மிகவும் தவறான தகவலாகும். சர்ச்சையை கிளப்பும் வகையில், அடிப்படை ஆதாரமின்றி, இப்பதிவை பகிர்ந்துள்ளனர்.
இந்த ஃபேஸ்புக் பதிவில் உள்ள கமெண்ட்களை நன்கு ஆய்வு செய்தோம். அப்போது ஒருவர், ஆசிபா வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் தீபிகா சிங் ராஜவாத் வெளியிட்ட தகவல் ஒன்றை பகிர்ந்திருந்த விவரம் கிடைத்தது.

இதன்பேரில், தீபிகா சிங் ரஜாவத் ஃபேஸ்புக் பக்கத்தில் சென்று தகவல் தேடினோம். அப்போது, அவர் ஜூன் 3ம் தேதி வெளியிட்ட ஒரு பதிவின் விவரம் கிடைத்தது. அதில், ஆசிபா வழக்கில் ஜூன் 10ம் தேதி தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறியிருந்தார்.

ஆரம்பத்தில், ஆசிபா வழக்கில், அவரது குடும்பத்தினர் சார்பாக, ஆஜராகி வந்தார். ஆனால், சில அரசியல் தலையீடு காரணமாக, அவரை தங்களுக்காக வாதாட வேண்டாம் என்று, ஆசிபாவின் குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.

தீபிகா சிங் ரஜாவத் ஆசிபா வழக்கறிஞராக இருந்தாலும், இல்லை என்றாலும், நமக்கு முக்கியம், இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகிவிட்டதா, குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்களா என்பதுதான். ஆனால், அப்படி எதுவும் இதுவரை நடைபெறவில்லை என்பதே உண்மை.
இதுதொடர்பாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தி விவரத்தை இங்கே கிளிக் செய்து படிக்கலாம்.

ஏற்கனவே, நமது மலையாள பிரிவு இதுதொடர்பாக, உண்மை கண்டறியும் சோதனை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான தகவல் என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஆசிபா கொலை வழக்குக் குற்றவாளிகள் 8 பேர் விடுதலை: ஃபேஸ்புக் பதிவால் பரபரப்பு
Fact Check By: Parthiban SResult: False
