
பஞ்சமி நில விவகாரத்தில் ராமதாஸ் ஆதாரம் தந்து அனுப்பவில்லை என்றும் வாய்தா வாங்கியுள்ளோம் என்றும் பா.ஜ.க நிர்வாகி சீனிவாசன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் சீனிவாசன் படத்துடன் கூடிய நியூஸ்7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பஞ்சமி நில விவகாரம். ராமதாஸ் ஆதாரம் தந்து அனுப்பவில்லை. மாரிதாஸ் தந்த எக்சல் ஷீட் ஆதாரத்தை ஆணையம் ஏற்கவில்லை. வாய்தா வாங்கியுள்ளோம். கழிவறை சென்றுவருவதாக கூறி பின்வாசல் வழியாக தப்பி ஓடவில்லை- தேசிய ஆதிதிராவிடர் ஆணைய இயக்குநர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான பின் மனுதாரர் சீனிவாசன் பேட்டி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை, Vino Vino என்பவர் 2019 நவம்பர் 20ம் தேதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து அந்த நிலம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபித்தால் டாக்டர் ராமதாஸ் அரசியலை விட்டு வெளியேறுவாரா என்று கேட்டு நிலத்தின் பட்டாவை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதற்கு ராமதாஸ், மூலபத்திரத்தை காண்பித்தால்தான் உண்மை தெரியும் என்றார். மூல பத்திரத்தை காட்டி நிரூபித்துவிட்டால் டாக்டர் ராமதாஸ் அவருடைய மகன் அன்புமணி ராமதாஸ் அரசியலைவிட்டே விலகிவிடுவார்களா என்று ஸ்டாலின் கேட்டார். இப்படி இரு தரப்பினரும் மாறி மாறி ட்விட், பேட்டி, அறிக்கைவிடுவது என்று அரசியல் ரீதியாக பிரச்னை நீண்டுகொண்டே சென்றது.
tamil.news18.com | Archived Link |
இந்த நிலையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் சீனிவாசன் என்பவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் இது குறித்து புகார் செய்திருந்தார். புகாரை ஏற்றுக்கொண்ட தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இது குறித்து விளக்கம் அளிக்க நேரில் ஆஜராகும்படி முரசொலி அறக்கட்டளை நிர்வாகத்துக்கும் தமிழக அரசுக்கும் உத்தரவிட்டது.
அந்த விசாரணை கூட்டத்தில் தான் சீனிவாசன் இவ்வாறு கூறினார் என்று மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளனர். அந்த தகவல் உண்மையா, உண்மையில் நடந்தது என்ன, சீனிவாசன் தப்பியோடினாரா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
முரசொலி தரப்பில் தி.மு.க எம்.பி ஆர்.எஸ்.பாரதி ஆஜரானார். புகார் தொடர்பாக தன்னுடைய எதிர்ப்பினை பதிவு செய்த ஆர்.எஸ்.பாரதி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “புகார் அளித்தவர்கள் ஆதாரம் கொடுத்தால் எந்த நேரத்திலும் வந்து விளக்கம் அளிக்க தயாராக உள்ளோம் என்று கூறினோம்” என்றார்.
vikatan.com | Archived Link 1 |
dailythanthi.com | Archived Link 2 |
தேசிய ஆதிதிராவிடர் ஆணைய துணை தலைவர் முருகன் கூறுகையில், ”ஆவணங்கள் தொடர்பாக, அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. தகவல் உரிமை சட்டத்தின் வாயிலாக, ஆவணங்கள் பெற்றுத் தருவதாக, மனுதாரர் தரப்பில் தெரிவித்தனர். எனவே, இந்த விசாரணை, ஜனவரி முதல் வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது,” என்றார்.
புகார் தொடுத்த சீனிவாசன் “அரசு சார்பில் தான் கால அவகாசம் கேட்டுள்ளது. ஆனால், ஆணையத்தின் துணைத் தலைவரோ, அரசு மற்றும் தங்கள் கட்சி கால அவகாசம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இந்த வழக்கின் விசாரணை, 2020ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தேதி எதையும் அவர் குறிப்பிடவில்லை” என்றார்.
tamil.indianexpress.com | Archived Link |
உண்மை இப்படி இருக்க, ராமதாஸ் ஆதாரம் தந்து அனுப்பவில்லை என்றும் மாரிதாஸ் தந்த எக்சல் ஷீட் ஆதாரத்தை ஆணையம் ஏற்கவில்லை என்றும் வாய்தா வாங்கியுள்ளோம் என்று சீனிவாசன் கூறியதாக நியூஸ் கார்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நியூஸ் கார்டு உண்மையா என்று கண்டறிய, நியூஸ்7 தமிழ் ஃபேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்தோம். இந்த நியூஸ்கார்டில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று நவம்பர் 19ம் தேதி நியூஸ் கார்டு ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். அப்போது நமக்கு அசல் நியூஸ் கார்டு கிடைத்தது.
Archived Link |
அதில், “தி.மு.க தரப்பில் மூல பத்திரம், ஆவணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. மு.க.ஸ்டாலின் காட்டிய பட்டாவை கூட ஆணையத்தில் வழங்கவில்லை. அரசு தரப்பில்தான் கால அவகாசம் கேட்டுள்ளனர், நாங்கள் கேட்கவில்லை. 2020 ஜனவரி வரை விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது” என்று இருந்தது.

இந்த நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்து போலியாக நியூஸ் கார்டு வெளியிட்டுள்ளது உறுதியானது. இதன்படி, டாக்டர் ராமதாஸ் ஆதாரம் கொடுத்து அனுப்பவில்லை என்று பா.ஜ.க பொதுச் செயலாளர் சீனிவாசன் கூறியதாக பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதியானது.
நம்முடைய ஆய்வில்,
அரசு தரப்பில் கால அவகாசம் கேட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராமதாஸ் ஆதாரம் தந்து அனுப்பவில்லை, மாரிதாஸ் தந்த எக்சல் ஷீட்டை ஆதாரமாக ஆணையம் ஏற்கவில்லை என்று சீனிவாசன் கூறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விசாரணைக்கு பயந்து அவர் தப்பி ஓடவில்லை என்பதும், விசாரணைக்குப் பிறகு அவர் பேட்டி அளித்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட அசல் நியூஸ் கார்டு கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் இந்த நியூஸ் கார்டே போலியானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், “முரசொலி நிலம் தொடர்பாக ராமதாஸ் ஆதாரம் தந்து அனுப்பவில்லை” என்று பா.ஜ.க நிர்வாகி சீனிவாசன் கூறியதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ராமதாஸ் ஆதாரம் தரவில்லை: பாஜக சீனிவாசன் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு!
Fact Check By: Chendur PandianResult: False
