திருப்பதி மலையில் கிறிஸ்தவ ஆலயம்- ஃபேஸ்புக் வைரல் புகைப்படம்

சமூக ஊடகம் | Social சமூகம்

திருப்பதி மலையில் நடுக்காட்டில் கிறிஸ்தவ ஆலயம் கட்டப்பட்டுள்ளதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Church 2.png

Facebook Link I Archived Link

அடர்ந்த வனப்பகுதியில் ஒரு கட்டிடம் உள்ளது. பார்க்க கிறிஸ்தவ ஆலயத்தின் முகப்பு பகுதி போலவும், கூரையின் மீது சிலுவை உள்ளது போலவும் தெரிகிறது. ஆனால், பார்வை மாடம் போலவும் காட்சி அளிக்கிறது. 

நிலைத் தகவலில், “ஆட்சிக்கு வந்து முழுசா இன்னும் மூனு மாசம் கூட ஆகல… திருப்பதி கோயிலுக்கு சொந்தமான இடங்களில் கிரிதஸ்வ ஆலயங்களை கட்ட மிசினரிகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்துட்டான் பாவாடை ஜெகன்மோகன் ரெட்டி… சந்திரபாபு நாயுடுவே பரவால்லடா…” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை Troll 420 என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 ஆகஸ்ட் 26ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தொலைவிலிருந்து பார்க்கும்போது அந்த படத்தில் இருப்பது கிறிஸ்தவ ஆலயம் போலவே உள்ளது. ஆனால், நடுக்காட்டில் இப்படி ஏன் கட்ட வேண்டும் என்ற கேள்வியும் எழுந்தது.

இந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த படம் பற்றிய உண்மை விவரங்கள் தெரியவந்தன.

Church 3.png

இது தொடர்பாக muchata.com என்ற தெலுங்கு இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தனர். அதை மொழி மாற்றம் செய்து பார்த்தோம். அந்த கட்டுரையில், இது கிறிஸ்தவ ஆலயம் இல்லை, ஆந்திர வனத்துறையின் கண்காணிப்பு கட்டிடம் என்று குறிப்பிட்டிருந்தனர். இதற்கு ஆதாரமாக பாரத் டி.வி என்ற தெலுங்கு செய்தி தொலைக்காட்சியில் வெளியான செய்தியின் படத்தைப் பகிர்ந்திருந்தனர். அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

எனவே, பாரத் டி.வி வெளியிட்ட வீடியோவை யூடியூபில் தேடி எடுத்தோம். அந்த வீடியோவைப் பார்த்தபோது அந்த கட்டிடம் பற்றிய முழு விவரமும் நமக்குத் தெரியவந்தது. கட்டிடத்தின் மீது சேஷாசலம் அடர்ந்த வனப்பகுதி (Seshachalam Biosphere Reserve) என்று ஆங்கிலம் மற்றும் தெலுங்கில் எழுதப்பட்டு இருந்தது.

Archived Link

சிலுவை போன்ற பகுதியைப் பார்த்தபோது அதில் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டு இருந்தது தெரிந்தது. அதன் அருகிலேயே சோலார் பேனல் சரிவாக வைக்கப்பட்டு இருந்தது. அதுவே சர்ச் சரிவான கூரை போலக் காட்சி அளித்தது தெரிந்தது. அந்த வீடியோவில், இது வனத்துறை கண்காணிப்பு கட்டிடம்தான் என்றும் கிறிஸ்தவ ஆலயம் அங்கு செயல்படவில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

தொடர்ந்து கூகுளில் தேடியபோது, இது தொடர்பாக உண்மை கண்டறியும் ஆய்வு நடத்தி கட்டுரைகள் வெளியிடப்பட்டது தெரிந்தது. அவற்றில் எல்லாம் பாரத் டி.வி வெளியிட்ட வீடியோவையே ஆதாரமாக காட்டியிருந்தனர். அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

நம்முடைய ஆய்வில் படத்தில் உள்ள கட்டிடம் ஆந்திர வனத்துறையினருக்கு சொந்தமானது என்றும், அங்கு கிறிஸ்தவ ஆலயம் செயல்படவில்லை என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:திருப்பதி மலையில் கிறிஸ்தவ ஆலயம்- ஃபேஸ்புக் வைரல் புகைப்படம்

Fact Check By: Chendur Pandian 

Result: False

1 thought on “திருப்பதி மலையில் கிறிஸ்தவ ஆலயம்- ஃபேஸ்புக் வைரல் புகைப்படம்

Comments are closed.