
‘’சற்றுமுன் நடந்த சம்பவம், உதவி தேவை, தீயணைப்புத் துறை வரும் வரை அதிகமாக பகிரவும், ப்ளீஸ்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வீடியோ பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
சற்றுமுன் நடந்த சம்பவம் உதவி தேவை தீயணைப்புத்துறை வரும் வரை அதிகமாக பகிரும் ப்ளீஸ்..
இந்த வீடியோ பதிவை, Tamil Android Boys என்ற ஃபேஸ்புக் குழு, கடந்த மே 16ம் தேதி வெளியிட்டுள்ளது. இதில், மின்சார கம்பம் தீப்பற்றி எரிய, அதில் இணைக்கப்பட்டுள்ள ஒயர்களும் தீப்பிடித்து வெடிக்க, சாலை முழுவதும் புகைமூட்டம் சூழ்வது போலவும், வாகன ஓட்டிகள் அலறுவது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தீயணைப்புத் துறை வரும் வரை அதிகமாகப் பகிரவும், ப்ளீஸ் என்று பதிவிட்ட நபர் கூறியுள்ளதால், பலரும் இதனை வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோ பதிவில், இது எதோ தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் போலவும், அதுவும் மே 16ம் தேதிதான் நடந்தது போலவும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அந்தவீடியோவை உற்று கவனத்தில் அதில், இந்தி மொழியை பேசிக் கொண்டு, பொதுமக்கள் அலறி அடித்து ஓடுவதைக் காணலாம். எடுத்த எடுப்பிலேயே இது தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் இல்லை என்று உறுதியாகிறது. அத்துடன், நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில், இது எந்த இடத்தில், எப்போது நடந்தது என்ற விவரமே கூறப்படவில்லை. அப்படி குறிப்பிட்டிருந்தால்தான், தீயணைப்புத் துறை வந்து உதவி செய்ய முடியும். அதுகூட தெரியாமல், முட்டாள்தனமாக இப்படி ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர்.
இது தமிழ்நாட்டில் நடக்கவில்லை என்று நமக்கு உறுதியாகிவிட்டது. இருந்தாலும், இது வட இந்தியாவில் எங்கு நடந்தது என்று கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொண்டோம். இந்த வீடியோவின் ஒரு ஃபிரேமை தனியாகப் பிரித்து, அதை வைத்து, ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம்.

இதன்பேரில், குறிப்பிட்ட லிங்கை கிளிக் செய்து பார்த்தால், அங்கே இந்த வீடியோ பற்றி எந்த தகவலும் இல்லை. ஆனால், நாம் ஆய்வு செய்யும் அதே வீடியோ காட்சிகள்தான் இதிலும் அச்சு மாறாமல் உள்ளது. இதனைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
இது எந்த இடம் என்று நீண்ட நேரம் முயற்சித்தும் தெரியாததால், நமக்கு கிடைத்த மேற்கண்ட வீடியோ ஆதாரத்தைப் பின்பற்றி கீவேர்ட் பயன்படுத்தி, யூ டியூப்பில் சென்று தேடிப் பார்த்தோம். அப்போது, இதற்கான அசல் வீடியோ ஆதாரம் கிடைத்தது.

இதனை Top 1 Viral Videos என்ற யூ டியூப் பக்கம், கடந்த மே 6ம் தேதி வெளியிட்டுள்ளது. எனினும், அதில் உள்ள இடம் எது என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

அதேசமயம், நாம் ஆய்வு செய்யும் பதிவில் கூறப்பட்டதுபோல, இந்த சம்பவம் மே 16ம் தேதியோ அல்லது தமிழகத்திலோ நடைபெறவில்லை. ஏனெனில், இதில் வரும் பொதுமக்கள் பேசும் மொழி இந்தி ஆகும். அத்துடன், இது மே 6ம் தேதி வெளியிடப்பட்ட வீடியோவாகும். யாரோ ஒருவர் சமூக ஊடகங்களில் இதனைப் பகிர, அதனை அப்படியே பல மொழிகள் கடந்து, உண்மைபோல பகிர்ந்து வருகிறார்கள் என்றுதான், இதைப் பார்த்தால் தோன்றுகிறது.
எனினும், இந்த வீடியோவில் வரும் வாகனங்களின் அடிப்படையில் எதுவும் நமக்கு விவரம் கிடைக்கிறதா என தேடிப் பார்த்தோம். அப்போது, இதில் வரும் ஒரு வெள்ளை நிற காரின் பதிவெண் (UP 16 AL 6162) வைத்து தேடிப் பார்த்தோம்.

இந்த பதிவெண்ணை மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றி, அதன் விவரங்களை தேடினோம். இதில், குறிப்பிட்ட கார் நொய்டாவைச் சேர்ந்தது என, தெரியவந்தது. அந்த காரின் பதிவெண், மாடல் மற்றும் உரிமையாளர் விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் வாகன பதிவெண் அடிப்படையில் வாகனங்களை கண்டுபிடிக்க உதவும் இணையதள முகவரி இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், உத்தரப் பிரதேசத்தில் நடந்த சம்பவத்தை, தமிழகத்தில் நடந்தது போல தவறான தகவலுடன் பரப்பியுள்ளனர் என்று, உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்பட மற்றும் வீடியோ பதிவுகளை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:சற்றுமுன் நடந்த சம்பவம்; உதவி தேவை- பீதியை கிளப்பும் வைரல் வீடியோ
Fact Check By: Parthiban SResult: False
