
‘’ட்ரோன் சாதனையாளர் பிரதாப்,’’ என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் நாள்தோறும் பகிரப்படும் தகவல்கள் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இதுதொடர்பான செய்தி லிங்கை கீழே இணைத்துள்ளோம்.
இந்த செய்தியில், ‘’கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர் பிரதாப், டிரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களை ரிமோட் மூலம் இயக்குவதில் நிபுணத்துவம் பெற்றவர். இவரது தயாரிப்புகள் உலக அளவில் வரவேற்கப்படுகின்றன. இவரின் திறமையை அங்கீகரித்து, விருது வழங்கி பிரதமர் மோடி கவுரவப்படுத்தியுள்ளார். மேலும், Defence DRDO-ல் இணைந்து பணிபுரியவும் பிரதாப்பை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்,’’ என்று எழுதியுள்ளனர்.
இந்த தகவல் கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் பகிரப்படுவதால், இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப்பில் கேட்டுக் கொண்டார்.
உண்மை அறிவோம்:
Drone Prathap என கூகுளில் தேடினால், இவரைப் பற்றி நிறைய விசயங்கள் காணக் கிடைக்கின்றன. அவற்றில் முக்கியமான விசயம், இந்த நபர் பற்றி கூறப்படும் விசயங்களில் பெரும்பாலானவை தவறான தகவல் என எடுத்த எடுப்பிலேயே தெளிவாகிறது.
இதன்படி, கர்நாடகா மாநிலம், மண்டியாவைச் சேர்ந்த பிரதாப், கடந்த 2019 ஆகஸ்ட் மாதத்தில் பெலகாவி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், மீட்புப் பணி மேற்கொள்வதில், தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கு உதவியாகச் செயல்பட்டதாக தெரிகிறது. அப்போது அவர் ட்ரோன் விமானங்களை இயக்கி, வெள்ளத்தில் சிக்கியவர்களை அடையாளம் கண்டு உயிருடன் மீட்பதில் உதவிகரமாக இருந்துள்ளார்.
இதனை நேரில் பார்த்த தேசிய பேரிடர் மீட்புப் படையினரே உறுதிப்படுத்தியும் உள்ளனர். இதுபற்றி ஊடகங்களிலும் அப்போது செய்தி வெளியாகியிருக்கிறது.

இந்த சம்பவத்திற்குப் பிறகுதான், பிரதாப் பற்றி பலவிதமான தகவல்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆக தொடங்கின. ஆனால், அவருக்கு பிரதமர் எதுவும் விருது அளித்து கவுரவிக்கவில்லை; DRDOல் பணிபுரிய அழைப்பு விடுக்கவும் இல்லை.
இதுபற்றிய வதந்திக்கு விளக்கம் அளித்த பிரதாப், எதிர்காலத்தில் DRDO பணிக்குச் சேர ஆவலாக உள்ளதாகவும், தற்போது தனக்கு வயது மற்றும் உரிய கல்வித்தகுதி இல்லை எனவும் பூம் ஊடகத்திற்கு பதில் அளித்திருக்கிறார்.

எனவே, அவருக்கு DRDO பணி எதுவும் கிடைக்கவில்லை; பிரதமர் விருது எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், ஃபிரான்ஸ் நிறுவனம் ஒன்றில் இருந்து பணிக்கு அழைப்பு தரப்பட்டிருக்கிறது என்று நன்கு புரிகிறது.
அடுத்தப்படியாக, அவர் தயாரித்த ட்ரோன்கள் என்று கூறி பகிரப்படும் புகைப்படங்கள் கூட தவறான தகவல்கள் என விவரம் கிடைத்தன. சில சர்வதேச ட்ரோன் கண்காட்சியில் பங்கேற்றபோது எடுத்த புகைப்படங்களை வைத்துக் கொண்டு, இவை எல்லாம் தனது தயாரிப்புகள் என்று பிரதாப் கூறிவருவதாக, தெரியவந்தது.

உதாரணமாக, மேலே உள்ள புகைப்படத்தில், ACSL என்ற பெயரைக் காண முடிகிறது. இது என்ன என்று விவரம் தேடினால், ஜப்பானைச் சேர்ந்த Autonomous Control Systems Laboratory Ltd-ன் லோகோ இது என தெரியவந்தது.
இந்நிறுவனத்திற்கும், பிரதாப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று, அதன் சிஓஓ Reddit இணையதளத்தில் பதில் அளித்துள்ளார். அவர் வாங்கியதாகக் கூறப்படும் விருதுகள் பலவும் உரிய ஆதாரங்களுடன் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
இறுதியாக, தன்னைப் பற்றி பரவும் தகவல்கள் பலவும் போலியானவை என்ற விவரம் தெரியவரவே, இதுபற்றி விளக்கம் அளிக்க முடியாமல் பிரதாப் திணறி வருகிறார். மேலும், தற்போதைய சூழலில், கொரோனா ஊரடங்கை மீறியதற்காக, கர்நாடகா போலீசார் அவரை கைது செய்து, கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
எனவே, நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி தெரியவரும் உண்மையின் விவரம்,
1) பிரதாப், கர்நாடகா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது மீட்புப் படையினருக்கு ட்ரோன் மூலமாகச் சில உதவிகளை செய்திருக்கிறார்.
2) அவரை பிரதமர் மோடி இதுவரை பாராட்டி விருது எதுவும் வழங்கியதில்லை. மேலும், அவர் DRDOல் பணிபுரியவில்லை. அவருக்கு அதற்கான கல்வித் தகுதியும் இல்லை.
3) தன்னைப் பற்றி கூறப்படும் தகவல்கள் பலவற்றை அவரே மறுத்துள்ளார்.
4) சில சர்வதேச ட்ரோன் விமான கண்காட்சியில் பங்கேற்ற புகைப்படங்களை வைத்துக் கொண்டு, அவர் தவறான தகவல்களை பரப்புவதாகக் கூறப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, ட்ரோன் பிரதாப் பற்றி பரவும் தகவல்களில் பெரும்பாலானவை தவறு என, நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால் +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Title:ட்ரோன் சாதனையாளர் எனக் கூறப்படும் பிரதாப் பற்றிய சில உண்மைகள்!
Fact Check By: Pankaj IyerResult: Partly False
