
‘’கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.14,500 இழப்பீடு கோரிய திமுக,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இந்த பதிவில், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை இணைத்துள்ளனர். அதில், ‘’கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மத்திய அரசு ரூ.7,500ம், மாநில அரசு ரூ.5,000ம் ஆக மொத்தம் ரூ.14,500 உடனே வழங்க வேண்டும் – திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம்.,’’ என எழுதப்பட்டுள்ளது.
இதனை உண்மையா என நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி விளக்கம் கேட்டிருந்தார்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட நியூஸ் கார்டை பார்த்தாலே எளிதாக, இது ஃபோட்டோஷாப் செய்யப்பட்டது என்று சந்தேகமின்றி தெரியவருகிறது. ரூ.7,500 மற்றும் ரூ.5,000 சேர்த்தால், ரூ.12,500 என்றுதான் வரும். ஆனால், ரூ.14,500 என்று திமுக கேட்டதாகவும், அக்கட்சி கணக்கில் வீக் என்பது போலவும் இது உள்ளது. எனவே, இது உண்மைதானா என்ற சந்தேகத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் (@PutiyaTalaimuraimagazine) சென்று தகவல் தேடினோம்.
அப்போது, அவர்கள் திமுக நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டம் பற்றி மே 31 அன்று வெளியிட்ட நியூஸ் கார்டு கிடைத்தது.

இதன்படி, கொரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, மத்திய அரசு ரூ.7,500ம், மாநில அரசு ரூ.5,000ம் வழங்க வேண்டும் என்றுதான் அனைத்துக்கட்சி கூட்டத்தில் திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ரூ.14,500 என எங்கேயும் குறிப்பிடவில்லை. புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டிலும் இது தெளிவாகவே உள்ளது.
அரசியல் உள்நோக்கத்திற்காக, இதனைச் சிலர் எடிட் செய்து பகிர்ந்து வருகின்றனர்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் எடிட் செய்யப்பட்ட தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய சந்தேகத்திற்கு இடமான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால் +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் தெரிவியுங்கள்.

Title:கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.14,500 இழப்பீடு கோரியதா திமுக?
Fact Check By: Pankaj IyerResult: Partly False
