
“அஸ்ஸாமில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெண் போராளியை ராணுவம் நடத்தும் விதத்தைப் பாருங்கள்” என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
பெண் ஒருவரின் டீ-ஷர்ட்டை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் இழுக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “ஒரு மனநோயாளியின் வார்த்தையாகவே இதனை பார்க்கிறேன். அஸ்ஸாமில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெண் போராளியை ராணுவம் நடத்தும் விதத்தைப் பாருங்கள். பெண்களின் மானத்தோடு விளையாடும் இந்திய ராணுவம். அஸ்ஸாம் இவ்வாறு பற்றி எரிந்து கொண்டிருக்க அமித்ஷாவோ ‘ஒரு இஞ்ச் கூட பின் வாங்க மாட்டோம்’ என்கிறார்.
இந்த நாட்டை சுடுகாடாக மாற்றியே தீருவோம் என்று திட்டமிட்டு செயல்படும் ஒரு மனநோயாளியின் வார்த்தையாகவே இதனைப் பார்க்கிறேன். தகவல் உதவி: ஹிந்துஸ்தான் டைம்ஸ். 04-01-2020″ என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை விழித்திடு தமிழா என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 ஜனவரி 5ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
படத்தில் உள்ள பெண்களைப் பார்க்கும் போது அஸ்ஸாம் மக்கள் போலத் தெரியவில்லை. மேலும், புத்த பிக்கு ஒருவர் உள்ளார். அவரைப் பார்க்கும்போது, அவருடைய உடையைப் பார்க்கும்போது அவர் திபெத்திய புத்த குருவாக இருக்கலாம் என்று தெரிகிறது. இதனால் இந்த பெண்கள் திபெத்திய பெண்களாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது.
இந்த படம் மற்றும் செய்தியை ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டதா என்பதை அறிய, முதலில் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த படம் இந்தியாவில் எடுக்கப்பட்டது இல்லை, நேபாளத்தில் எடுக்கப்பட்டது என்ற செய்தி கிடைத்தது.

Search Link | hindustantimes.com | Archived Link |
அதனுடன் ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழில் இந்த புகைப்படத்துடன் வெளியான செய்தியும் கிடைத்தது. அதைப் பார்த்தோம். அது உண்மை கண்டறியும் ஆய்வு கட்டுரை. அதில், இந்திய ராணுவத்தினர் பெண் ஒருவரிடம் தவறாக நடந்துகொண்டார் என்று பரவும் தகவல் தவறு என்று குறிப்பிட்டிருந்தனர்.
ரிவர்ஸ் இமேஜ் தேடலில் கிடைத்த முடிவுகளை ஆய்வு செய்துகொண்டிருந்தோம். அப்போது, பல ஆண்டுகளாக இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில், செய்தி ஊடகங்களில் வெளியாகி வந்திருப்பது தெரிந்தது. தொடர்ந்து பல பதிவுகள் இருந்ததால், எந்த தேதியில் முதலில் இந்த படம் வெளியானது என்பதைக் கண்டறிவது சற்று கடினமானதாகிவிட்டது.
தொடர்ந்து வேறு வேறு ரிவர்ஸ் இமேஜ் தேடுதளங்களில் இந்த படத்தை பதிவேற்றித் தேடியபோது நமக்கு இந்த படத்தின் பூர்வீகம் கிடைத்தது. stock.adobe.com என்ற இணையதளம் இந்த படத்தை விற்பனைக்காக 2019 ஏப்ரல் 17ம் தேதி பதிவேற்றியிருப்பது தெரிந்தது.

Search Link | stock.adobe.com | Archived Link |
ஸ்டாக் படங்கள் விற்பனை என்றால், அதில் அசல் தகவல் இருக்கும். அதனால், அந்த லிங்கை கிளிக் செய்து திறந்து பார்த்தோம். அப்போது இந்த படம் 2008ம் ஆண்டு நேபாள தலைநகர் காட்மாண்டுவில் எடுக்கப்பட்டது என்பது தெரிந்தது. படம் பற்றிய குறிப்பில், “2008 மார்ச் 24ம் தேதி காட்மாண்டுவில் உள்ள உலக நாடுகள் அலுவலக கட்டிடத்தின் முன்பாக திபெத்திய போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர். சீனாவுக்கு எதிரான இந்த போராட்டத்தை நேபாள போலீசார் தடுத்து நிறுத்தி 250 போராட்டக்காரர்களைக் கைது செய்தனர். இந்த படத்தை REUTERS எடுத்திருப்பதையும் குறிப்பிட்டிருந்தனர்.
நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்தி பிரிவில் கூட இந்த படம் தொடர்பான ஆய்வுக் கட்டுரை வெளியாகி இருந்தது. அதிலும் கூட இந்த தகவல் தவறானது என்று கண்டறிந்தது தெரிந்தது. அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த பெண்ணின் படம் குடியுரிமை திருத்தச் சட்டத்தின்போது எடுக்கப்பட்டது இல்லை. இந்த படம் 2008ம் ஆண்டு நேபாளத்தில் எடுக்கப்பட்டது. படத்தில் உள்ளவர்கள் இந்திய ராணுவத்தினர் இல்லை… நேபாள போலீசார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அஸ்ஸாம் பெண்கள் மானத்தோடு விளையாடும் இந்திய ராணுவம் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பெண்ணின் மானத்தோடு விளையாடும் இந்திய ராணுவம்?- ஃபேஸ்புக் பகீர் படம்
Fact Check By: Chendur PandianResult: False
