
சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட விவசாயிகள் மசோதாவை எதிர்த்து லட்சக் கணக்கில் விவசாயிகள் திரண்டு நடத்திய போராட்டத்தை மீடியாக்கள் மறைத்தன என்று கூறி ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

லட்சக் கணக்கில் திரண்ட மக்களின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “லட்சக்கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீடியாக்கள் அமைதியோ அமைதி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஹேஷ்டேக்கில் Farmers Protest, farmers protest challenge, Farmers bill 2020, DownModi” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Senthilkumar Ragupathy என்பவர் செப்டம்பர் 26, 2020 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இந்த புகைப்பட பதிவை ஷேர் செய்து வருகின்றனர்.

அதே போல், “இந்தக் கொரோனோ பீதியிலும் இத்தனை ஆயிரம் விவசாயிகள் அரசுக்கு எதிராக உயிரை பணயம் வைத்து திரண்டு இருக்கிறார்கள் என்றால், அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் மசோதாக்கள் கொரோனாவை காட்டிலும் எவ்வளவு கொடியது என்று உணர்ந்து கொள்ளுங்கள்! ஹரியானா விவசாயிகளுக்கு வாழ்த்துக்கள்!” என்று மற்றொரு படம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த படத்தைக் கருப்பு கருணா என்பவர் 2020 செப்டம்பர் 26ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
விவசாயிகள், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி விவசாயம் தொடர்பாக மூன்று மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலும் அளித்துவிட்டார்.
இந்த மசோதாவுக்கு பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மிகக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டம், பஸ் மறியல் உள்ளிட்ட நிகழ்வுகளை ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றன. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விவசாயிகள் போராட்டத்தின் படங்களை எல்லாம் தற்போது நடந்தது போன்று வெளியிட்டு ஊடகங்கள் போராட்டத்தை மறைக்கின்றன என்ற வகையில் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவில் தொடர்ந்து கட்டுரை வெளியிட்டு வருகிறோம்.
பஞ்சாபில் வேளாண் மசோதாவுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது தாக்குதலா? |
பாஜக எம்.எல்.ஏ முகத்தில் சாணி அடித்த விவசாயிகள் |
இந்த நிலையில், விவசாயிகள் போராட்டத்தின் போது எடுத்த படம் என்பது போல சமூக ஊடகங்களில் வைரல் ஆகும் இரண்டு படங்களை நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம். முதலில் ஹரியானா விவசாயிகள் போராட்டத்தின் படம் என்று பகிரப்பட்ட படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
அதை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடிய போது, அது ராஜஸ்தானில் 2017ம் ஆண்டு நடந்த விவசாயிகள் பேரணியின் போது எடுக்கப்பட்டதாக, தெரிந்தது.
விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேலை வழங்க வேண்டும், ஓய்வூதியம் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி லட்சக் கணக்கான விவசாயிகள் இந்த பேரணியில் பங்கேற்றனர்.
2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி இந்த படத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்ததை நமக்குக் கிடைத்தது. இதன் மூலம் விவசாயிகள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானாவில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின் படம் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.
அடுத்ததாக, இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் பற்றிய ஆய்வை நடத்தினோம். அந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடிய போது, 2018ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்து மும்பை வரை நடந்த பேரணியின் போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது தெரிந்தது.
நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட படத்தில் மும்பை லைவ் என்ற வாட்டர் மார்க் தெரிந்தது. எனவே, மும்பை லைவ் என்ற ஊடகத்தில் இந்த படம் எப்போது வெளியாகியது என்று பார்த்தோம். அப்போது, மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் 2018ம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் தேதி இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்று மும்பை லைவ் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுவும் விவசாயிகள் நடத்திய பேரணிதான்.
விவசாய சட்டத்துக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மிகக் கடுமையான போராட்டங்கள் நடப்பது உண்மைதான். ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட இரண்டு படங்களும் சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் வேறு கோரிக்கைகளுக்காக விவசாயிகள் நடத்திய பேரணியின் போது எடுக்கப்பட்டவை என்பது உறுதியாகிறது.
இவற்றுக்கும் தற்போது நாடு முழுக்க நடந்து வரும் விவசாய சட்டத்துக்கு எதிரான போராட்டங்களுக்கும் தொடர்பு இல்லை. பழைய படத்தை எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டு மிக பிரமாண்ட போராட்டத்தை ஊடகங்கள் மறைக்கின்றன என்று தவறான தகவல் சேர்த்துப் பகிரப்பட்டுள்ளது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவுகள் தவறானவை என்பது உறுதியாகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்ற தகவல் தவறானது என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:லட்சக் கணக்கில் திரண்ட விவசாயிகள் போராட்டத்தை மீடியாக்கள் மறைத்ததா?
Fact Check By: Chendur PandianResult: False
