
மேட்டூர் அணை திறப்பின் போது சமூக இடைவெளி கேள்விக்குறியானதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

மேட்டூர் அணை திறப்பு விழா புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “கொரோனா பரவாமல் இருக்க சமூக இடைவெளி அவசியம் – அரசு” என உள்ளது. நிலைத் தகவலில், “ஒன்பது கிரகம் உச்சம்பெற்ற ஒருவனுக்கு மாஸ்க்கும் சமுக இடைவெளியும் அவசியமில்லாதது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Sabak Sabak என்பவர் 2020 ஜூன் 13ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேட்டூர் அணை இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டது. சமூக இடைவெளி விட சதுரங்கள் வரையப்பட்டு மிகவும் பாதுகாப்பாக நடத்தப்பட்டது. மாஸ்க் அணிந்து வந்த எடப்பாடி பழனிசாமி மலர் தூவும் படங்கள் பல வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் காற்றில் பரக்கும் சமூக இடைவெளி என்று செய்தி மற்றும் பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த படத்தில் எல்லோரும் மிக நெருக்கமாக இருக்கிறார்கள். சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சித் தலைவர் ரோகிணியும் உள்ளார். ரோகிணி 2019ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இசைக் கல்லூரி பதிவாளராக பணியிட மாறுதல் செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் நவம்பரில் மத்திய அரசின் உயர்கல்வித் துறை துணை செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்படி இருக்கும்போது அவர் எப்படி சேலத்தில் நடந்த விழாவில் பங்கேற்றிருப்பார் என்ற கேள்வி எழுந்தது. இவை எல்லாம் இந்த புகைப்படம் பழைய படம் என்பதை உறுதி செய்தது.

2020 ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்ட படங்களைத் தேடினோம். அப்போது அரசு வெளியிட்ட படங்கள் கிடைத்தன. அதில் சமூக இடைவெளியிட்டு, முகக்கவசம் அணிந்து இருப்பதைக் காண முடிந்தது. எனவே, பழைய படத்தை வெளியிட்டுள்ளது உறுதியானது.
இந்த படம் எப்போது எடுக்கப்பட்டது என்பதை அறிய படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது தினகரன் நாளிதழில் இந்த புகைப்படம் வெளியிடப்பட்டு இருந்தது. 2020 ஜூன் 12ம் தேதி வெளியிடப்பட்ட அந்த புகைப்பட பதிவில் “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் நடைபெற்ற விழாவில், வேளாண் பெருமக்களின் நலன் கருதி குருவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்து மலர் தூவினார். உடன், பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் வி.சரோஜா, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் திரு.கே.சி. கருப்பணன், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் டாக்டர் க. மணிவாசன், சேலம் மாவட்ட ஆட்சியர் ஆகியோரும் இருந்தனர்” எனக் குறிப்பிட்டிருந்தனர்.
குமுதம் ஆன்லைன் பக்கத்திலும் இந்த படத்தை 2020 ஜூன் 12ம் தேதி வெளியிட்டிருந்தனர். கோப்புப் படம் என்று குறிப்பிடவில்லை. ரோகிணி பங்கேற்றது பற்றியும் எதுவும் குறிப்பிடவில்லை. முன்னணி ஊடகங்கள் வெளியிட்ட படம் என்பதால் இப்போது நடந்தது என்று நம்பி பலரும் இதை ஷேர் செய்து வரலாம் என்பது தெரிந்தது.

நீண்ட தேடலுக்குப் பிறகு 2018ம் ஆண்டு இந்த படத்தை டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட ஊடகங்கள் பயன்படுத்தியிருப்பதைக் காண முடிந்தது. இதன் மூலம் மேட்டூர் அணை திறப்பு விழாவின் போது சமூக இடைவெளி மீறப்பட்டது என்று பகிரப்படும் படம் 2018ம் ஆண்டு எடுக்கப்பட்டது, அதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:மேட்டூர் அணை திறப்பு விழாவில் சமூக இடைவெளி இல்லையா?- பழைய புகைப்படத்தால் சர்ச்சை
Fact Check By: Chendur PandianResult: False
