சுர்ஜித் மீட்பு பணிக்கு ரூ.11 கோடி செலவு- ஃபேஸ்புக் செய்தி உண்மையா?

அரசியல் | Politics சமூகம்

மணப்பாறை சிறுவன் சுர்ஜித் வில்சனை ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு ரூ.11 கோடி செலவிடப்பட்டது என்று ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Sujith 2.png
Facebook LinkArchived Link

நம் தினமதி நாளிதழ் என்ற பெயரில் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “சுர்ஜித் வில்சன் மீட்புப் பணிக்கு ரூ.11 கோடி செலவிடப்பட்டது – ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் என்று உள்ளது. 

இந்த பதிவை, Sasi Travels Pms என்பவர் 2019 அக்டோபர் 30ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் குழந்தை சுஜித்தை மீட்க அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டது. இருப்பினும், உயிரற்ற சடலமாகவே சுஜித்தை மீட்க முடிந்தது. இந்த விவகாரத்தை வைத்து பலரும் வதந்தி பரப்பி வருவது அதிர்ச்சியை அளிக்கிறது.

குழந்தை சுஜித்தை மீட்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ரூ.11 கோடி செலவு ஆனதாக, தமிழ்நாடு அரசு பேரிடர் மேலாண்மை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் குறிப்பிட்டதாக ஒரு வதந்தி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். சமூக ஊடகங்களில் தேடும்போது செலவு தொடர்பாக விதவிதமான தகவல் நமக்கு கிடைத்தது. சில பதிவாளர்கள், 11 கோடி ரூபாய்க்கு கணக்கு கூட காட்டியிருந்தனர்.

”சுஜித் மீட்பு பணி செலவு” என்று கூகுளில் டைப் செய்து தேடியபோது 11 கோடி ரூபாய் செலவானது என்று பரவும் தகவல் வெறும் வதந்தி என்பது தெரியவந்தது.

Sujith 3.png
Search Link

இது தொடர்பாக நியூஸ் 18 செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், ”குழந்தை சுஜித்தின் உடலை மீட்க தமிழக அரசு 11 கோடி ரூபாய் செலவு செய்தது என சமூகவலை தளத்தில் ஒரு செய்தி வேகமாகப் பரவியது. அதில் ரிக் இயந்திரம் வாடகை, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களின் சாப்பாடு செலவு, தமிழக அரசின் மருத்துவக் குழுவிற்கான வாடகை, 108 ஆம்புலன்ஸ் வாடகை, குழந்தை சுஜித்திற்காக வாங்கப்பட்ட சவப்பெட்டி, தோண்டிய குழி என மொத்தமாக 11 கோடி ரூபாய் என்றும் இருந்தது.

இது குறித்து பேரிடர்  மேலாண்மை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. “அதற்கு அது வெறும் வதந்தி. தவறான வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். நாட்டையே உலுக்கும் துயர சம்பவம் நடைபெற்றிருக்கும் இந்த நேரத்தில் இது போன்ற வீண் வதந்திகளைப் பரப்ப வேண்டாம்“ என்று கேட்டுக் கொண்டார் என்று குறிப்பிட்டு இருந்தனர். இதே செய்தியை தினகரன் உள்ளிட்ட எல்லா ஊடகங்களும் வெளியிட்டிருந்தன.

tamil.news18.comArchived Link 1
dinakaran.comArchived Link 2

தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை என்று திருச்சி கலெக்டர் கூறியதாக தினமலர் செய்தி வெளியிட்டிருந்தது. அதில், சுஜித் மீட்புப் பணிக்கு ரூ. 5 லட்சம், 5 ஆயிரம் லிட்டர் டீசல் செலவானது. மீட்புப் பணியில் ஈடுபட்ட ஒ.என்.ஜி.சி., மற்றும் என்.எல்.சி., தனியார் நிறுவனங்கள் தங்களுக்கான செலவு தொகையைக் கோரவில்லை. மீட்பு பணி குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார் என்று குறிப்பிட்டு இருந்தனர். இந்த செய்தியை தினமணி உள்ளிட்ட பல ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.

dinamalar.comArchived Link 1
dinamani.comArchived Link 2

நம்முடைய ஆய்வில்,

குழந்தை சுஜித்தை மீட்பதற்கான எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு 11 கோடி ரூபாய் ஆனதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல் தவறானது என்று ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் கூறிய செய்தி கிடைத்துள்ளது.

மீட்புப் பணிக்கு ரூ.5 லட்சம் மற்றும் 5 ஆயிரம் லிட்டர் டீசல் செலவானதாக திருச்சி கலெக்டர் சிவராசு கூறிய செய்தி கிடைத்துள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், குழந்தை சுஜித்தை மீட்க அரசு ரூ.11 கோடி ரூபாய் செலவு செய்தது என்று ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் கூறியதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:சுர்ஜித் மீட்பு பணிக்கு ரூ.11 கோடி செலவு- ஃபேஸ்புக் செய்தி உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False