
பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா, பா.ஜ.க-வில் இணைந்ததாக ஒரு பதிவு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link
பிரதமர் மோடியுடன் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா பா.ஜ.க-வில் இணைந்தார் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்தப் பதிவை Bullet Pandi RD என்பவர் 2019 ஜூன் 27ம் தேதி வெளியிட்டுள்ளார். இதை தற்போது பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழில் தோழா, ரட்சகன், பயணம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நாகார்ஜூனா. தெங்கின் முன்னணி ஹீரோக்களில் அவரும் ஒருவர். அவர் பா.ஜ.க-வில் இணைந்துவிட்டதாக செய்திகள் பகிரப்பட்டு வருகிறது. ஃபேஸ்புக்கில் பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

இது தொடர்பாக செய்திகள் ஏதேனும் வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. அதே நேரத்தில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்ற புகைப்படம் பற்றிய தகவல் நமக்கு கிடைத்தன.
2014ம் ஆண்டு மோடி குஜராத் முதல்வராக இருந்த போது நாகார்ஜூனா அகமதாபாத் சென்று மோடியை சந்தித்துள்ளார். அப்போது, குஜராத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகளைப் பார்த்த நாகார்ஜூனா, வளர்ச்சித் திட்டங்களால் நான் ஈர்க்கப்பட்டேன் என்று கூறியுள்ளார்.

அந்த நேரத்தில், தன்னுடைய மனைவி அமலாவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு அவர் மோடியை சந்தித்ததாக வதந்திகள் கிளம்பின. இது குறித்து நாகார்ஜூனாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “மோடியின் திட்டங்களால் நான் ஈர்க்கப்பட்டேன். அவருக்கு என்னுடைய ஆதரவைத் தெரிவித்துக்கொண்டேன். ஆனால், அரசியலில் இறங்கும் எண்ணம் எனக்கு இல்லை. எந்த ஒரு கட்சியிலும் என்னை இணைத்துக்கொள்ளும் எண்ணமும் இல்லை” என்று கூறினார். இது தொடர்பாக நியூஸ் 18-ல் வெளியான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்ற படம், இந்தியா டி.வி-யில் வெளியான செய்தியில் நமக்குக் கிடைத்தது. அந்த செய்தி மற்றும் படத்தைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதுதவிர, இந்து, எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல பத்திரிகைகளில் இந்த செய்தி வெளியாகி உள்ளது.
சமீபத்தில் அரசியல் நிலைப்பாடு தொடர்பாக நாகார்ஜூனா பேட்டி ஏதும் அளித்துள்ளாரா என்று தேடினோம். அப்போது, 2019 பிப்ரவரி மாதம் ஜெகன் மோகன் ரெட்டியுடனான சந்திப்புக்குப் பிறகு அவர் அளித்த பேட்டி ஒன்று நமக்கு கிடைத்தது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு இந்த சந்திப்பு நடந்தது. இதனால், நாகார்ஜூனா ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸில் இணைவார், தேர்தலில் போட்டியிட உள்ளார் என்று எல்லாம் செய்தி பரவியது. அப்போது பேட்டி அளித்த நாகார்ஜூனா, “ஜெகன் மோகனை சந்தித்ததில் எந்த அரசியலும் இல்லை. நான் அரசியலில் ஆர்வமில்லை” என்று கூறியுள்ளார். அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
நாம் மேற்கொண்ட ஆய்வில்,
1) மேற்கண்ட பதிவில் உள்ள புகைப்படம் 2014ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2) எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் இணைப் போவது இல்லை என்று அப்போதே அவர் பேட்டி அளித்துள்ளார்.
3) 2019ம் ஆண்டு பிப்ரவரியிலும் எந்த கட்சியிலும் இணையப் போவது இல்லை, தனக்கு அரசியல் ஆர்வம் இல்லை என்று அவர் கூறிய பேட்டி நமக்கு கிடைத்துள்ளது.
4) நாகார்ஜூனா சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்தார் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் செய்தியும் கிடைக்கவில்லை.
இதன் அடிப்படையில், பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா பா.ஜ.க-வில் இணைந்தார் என்ற தகவல் பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பா.ஜ.க-வில் இணைந்த தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா! – ஃபேஸ்புக் பதிவு உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
