கம்பியில் தொங்கியபடி ஆற்றைக் கடக்கும் குழந்தைகள்; இந்த படம் உத்தரகாண்டில் எடுத்ததா?

இந்தியா | India சமூக ஊடகம் | Social சமூகம்

குழந்தைகள் கம்பி ஒன்றில் தொங்கியபடி ஆற்றைக் கடக்கும் படம் உத்தரகாண்ட் மாநிலத்தில் எடுக்கப்பட்டது என்று பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

கம்பியில் தொங்கியபடி ஆற்றைக் கடக்கும் குழந்தைகள் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பள்ளி செல்லும் குழந்தைகள் நிலை பாரிர். உத்தரகண்டு மாநிலம்… பாலம் கட்ட வேண்டாம் கோயில் கட்டினால் போதும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த பதிவை Madhavan Madhavan Madhavan என்பவர் 2020 ஆகஸ்ட் 14ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

உத்தரகாண்டில் தற்போது பா.ஜ.க ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில் அங்கு குழந்தைகள் பாலம் இல்லாததால் கம்பி வழியே ஆற்றைக் கடப்பதாக குறிப்பிட்டுள்ளனர். உண்மையில் இந்த உத்தரகாண்டில் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது இந்த படம் பல ஆண்டுகளாக இந்திய, நேபாள, வியட்நாம் ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதைக் காண முடிந்தது. அதில், மூன்று நாட்டு ஊடகங்களிலும் தங்கள் நாட்டுக் குழந்தைகள் பள்ளி செல்லும் படம் என்றே குறிப்பிட்டிருந்தனர். ஆனால், படத்தில் உள்ள குழந்தைகள் வியட்நாமைச் சேர்ந்தவர்கள் போல இல்லை. 

uttarakhandnews1.comArchived Link

2012ம் ஆண்டு உத்தரகாண்ட் குழந்தைகள் என்று பிளாக் பதிவர் ஒருவர் பதிவிட்டிருந்தார். ஆனால், உத்தரகாண்டில் எங்கே இது எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை. 2013ம் ஆண்டு வெளியான வியட்நாம் செய்தி ஒன்றில், இந்த புகைப்படம் நேபாளத்தில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனால், நேபாளத்தில் எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை.

zingnews.vnArchived Link 1
Facebook LinkArchived Link 2

தொடர்ந்து தேடியபோது நேபாள இணையதளங்கள், ஃபேஸ்புக் பக்கங்கள் இந்த படம் நேபாளத்தில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்தன. உலகின் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் மிக மோசமான 10 பாதைகள் என்ற தலைப்பில் செய்தி ஒன்று வெளியாகி இருந்தது. அதில் இந்த புகைப்படமும் இருந்தது. அதில் Benighat, Nepal என்று குறிப்பிட்டிருந்தனர். 

2minutefacts.comArchived Link

இதன் அடிப்படையில், நேபாளம், Benighat, குழந்தைகள், நதி, பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் போன்ற கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி தேடினோம். அப்போது பிபிசி முதற்கொண்டு பல முன்னணி ஊடகங்களும் இந்த கம்பி மூலம் குழந்தைகள் ஆற்றைக் கடப்பது பற்றிய செய்தியை வெளியிட்டிருந்தன. 

dailymail.co.ukArchived Link 1
bbc.comArchived Link 2

dailymail.co.uk என்ற ஊடகம் குழந்தைகள் ஆற்றைக் கடப்பது தொடர்பாக பல படங்களை வெளியிட்டிருந்தது. அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது போலவே இடம் இருந்தது. அதே நேரத்தில் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் எடுக்கப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்ல ஆற்றைக் கடக்கும் இந்த புகைப்படம் நேபாளத்தில் எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:கம்பியில் தொங்கியபடி ஆற்றைக் கடக்கும் குழந்தைகள்; இந்த படம் உத்தரகாண்டில் எடுத்ததா?

Fact Check By: Chendur Pandian 

Result: False