சீன தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களின் உடல் கொண்டு செல்லப்படும் படமா இது?

இந்தியா | India சமூக ஊடகம் | Social சமூகம்

லடாக் எல்லையில் சீன ராணுவம் தாக்கியதில் பலியான இந்திய ராணுவ வீரர்களின் உடல் கொண்டு செல்லப்படுகிறது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

தேசியக் கொடி, மலர் வளையம் வைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படும் வீரர்களின் உடல்கள் அடங்கிய பெட்டியின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், சீன எல்லையில் நடந்த போரில் இந்திய வீரர்கள் இறந்த உடல்கள் ஒரு இடத்தில் வைக்கப்பட்டுள்ளது… வீரவணக்கம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Gudiyattam Kumaran என்பவர் வெளியிட்டுள்ளார். பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

லடாக் எல்லையில் சீனா அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் பலியாகினர். இந்திய ராணுவ வீரர்களுக்கு நாடே அஞ்சலி செலுத்துகிறது. அதே நேரத்தில் பலியான ராணுவ வீரார்கள் உடல் கொண்டு செல்லப்படுகிறது என்று ஒரு படத்தைப் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். உண்மையில் இந்த புகைப்படம் சீன தாக்குதலில் பலியான ராணுவ வீரர்கள் படமா என்று ஆய்வு செய்தோம்.

சீனாவின் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த படத்திலே 30-40 சவப்பெட்டிகள் உள்ளது போல உள்ளது. ராணுவ வீரர்களின் உடல் எடுத்து செல்லப்படும் படம்தானே என்று விட்டுவிட்டால், பெட்டிகளின் எண்ணிக்கையை வைத்து உயிரிழப்பு அதிக அளவிலிருந்திருக்கும் போல, ராணுவம் மறைக்கிறது என்று சிலர் தவறாக எண்ணவும் வாய்ப்புள்ளது. எனவே, இந்த படம் எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு மேற்கொண்டோம்.

Archived Link

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் இந்த படம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. அதில் மோடியின் ட்வீட் பதிவு ஒன்றுக்கு கமெண்ட் செய்திருந்த ஒருவர் இந்த படத்தை அப்லோட் செய்திருப்பதைக் காண முடிந்தது.

புல்வாமா தாக்குதல் சம்பவத்தின் முதலாமாண்டு நினைவையொட்டி மோடி வெளியிட்டிருந்த பதிவு அது. வீர வணக்கம் என்று கூறி இந்த புகைப்படத்தை பூனம் சிங் என்பவர் 2020 பிப்ரவரி 14ம் தேதி பதிவிட்டிருந்தார். இதன் மூலம் இந்த புகைப்படம் சீன தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல் இல்லை என்பது உறுதியானது

புல்வாமா தாக்குதல், பாதுகாப்புப் படை வீரர்களின் உடல் உள்ளிட்ட கீ வார்த்தைகளை வைத்து கூகுளில் தேடியபோது 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட பல செய்தி, சமூக ஊடக பதிவுகள் நமக்குக் கிடைத்தன. அவை அனைத்திலும் இது புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் உடல் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 

ஏஷியாநெட் இந்தி, தினக் பாஸ்கர், bharat-rakshak.com, reddit.com என பல தளங்களில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்கள் உடல் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்ட படம் என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படம் லடாக் எல்லையில் சீன ராணுவ தாக்குதலில் உயிரிழந்தவர்கள் படம் இல்லை என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:சீன தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களின் உடல் கொண்டு செல்லப்படும் படமா இது?

Fact Check By: Chendur Pandian 

Result: False