முதல்வர் ஆகும் தகுதி கனிமொழிக்கு உண்டு என்று வைகோ கூறவில்லை!

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

தி.மு.க முதல்வர் வேட்பாளர் ஆகும் தகுதி கனிமொழிக்கு உண்டு என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியதாக புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

ட்விட்டரில் யாரோ வெளியிட்ட புதிய தலைமுறை நியூஸ் கார்டுடனான பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்துள்ளனர். நியூஸ் கார்டில், “கனிமொழி பன்முக ஆற்றல் கொண்டவர். அவருக்கு திமுக முதல்வர் வேட்பாளர் ஆகும் தகுதி உண்டு – மதிமுக பொதுச் செயலாளர் – வைகோ” என்று உள்ளது.

ஸ்கிரீன்ஷாட் பதிவில், “இனி பேசாம விட்டுறனும்.. நடக்கவேண்டியது எல்லாம் அது பாட்டுக்கு நடக்கும். நடந்தே தீரும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Sugumar Balachandran என்பவர் 2020 ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்த நியூஸ் கார்டு பார்ப்பதற்கு அசல் போலத் தெரிந்தாலும் உற்றுப் பார்த்தால் போட்டோஷாப் செய்யத் தெரியாமல் அரைகுறையாக கட் செய்ததைக் காண முடிகிறது. மேலும் இந்த ஃபாண்ட் வழக்கமான புதிய தலைமுறை பயன்படுத்தும் ஃபாண்ட் போலவும் இல்லை. எனவே, இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். ட்விட்டரில் வெளியான பதிவு தேடியபோது, பலரும் இதை ஷேர் செய்து வருவதைக் காண முடிந்தது.

Archived Link

முதலில், நியூஸ் கார்டு போலியானதாக இருந்தாலும் வைகோ அது போன்ற கருத்தைத் தெரிவித்தாரா என்று ஆய்வு செய்தோம். ஆகஸ்ட் 10ம் தேதி வைகோ, பேட்டி, அறிக்கை ஏதும் வெளியிட்டுள்ளாரா என்று தேடினோம். அப்போது அவர் அறிக்கை வெளியிட்டதாக செய்தி கிடைத்தது. அந்த செய்தியை படித்துப் பார்த்தோம். எந்த இடத்திலும் கனிமொழி முதல்வர் வேட்பாளராக தகுதி படைத்தவர் என்று அவர் கூறவில்லை. இந்தி எதிர்ப்பு பற்றியே அவர் பேசியிருந்தார். முழு அறிக்கை வைகோ ஃபேஸ்புக் பக்கத்தில் நமக்கு கிடைத்தது.

dinakaran.comArchived Link 1
Facebook LinkArchived Link 2

அடுத்ததாக ஆகஸ்ட் 10ம் தேதி புதிய தலைமுறையில் வெளியான நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம். அப்போது வைகோ தொடர்பாக புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு கிடைத்தது.

அதில், “இந்தி ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயன்றால் அடி முதல் நுனி வரை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்ப்போம். பன்முகத்தன்மைதான் இந்தியாவின் ஒற்றுமைக்கு பலம் சேர்க்கிறது என்பதை பாஜக உணரவில்லை – வைகோ” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடுத்து விஷமத்தனமாக, வைகோ கூறாததை சேர்த்து வெளியிட்டிருப்பது தெரிந்தது.

Facebook LinkArchived Link

இதை உறுதி செய்ய புதிய தலைமுறை ஆன்லைன் பிரிவு நிர்வாகியைத் தொடர்புகொண்டு பேசினோம். அவர் இந்த நியூஸ் கார்டு போலியானது. நாங்கள் வெளியிட்டது இல்லை என்று உறுதி செய்தார்.

நம்முடைய ஆய்வில்,

புதிய தலைமுறை பெயரில் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைகோ கூறாததை விஷம நோக்கில் வைகோ பெயரில் வெளியிட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இந்த ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:முதல்வர் ஆகும் தகுதி கனிமொழிக்கு உண்டு என்று வைகோ கூறவில்லை!

Fact Check By: Chendur Pandian 

Result: False