
‘’விஜிபி சிலை மனிதன் தாஸ் கொரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்துவிட்டார்,’’ எனக் கூறி பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
இதுபோல, நிறைய பேர் விஜிபி சிலை மனிதர் தாஸ் உயிரிழந்துவிட்டதாகக் கூறி தகவல் பகிர்ந்து வருகின்றனர். ‘’இது அவரது தனிப்பட்ட வாழ்வை பாதிப்பதாக உள்ளது, இப்படி எங்கேயும் செய்தி வெளியாகவில்லை. அவர் உயிருடன் உள்ளாரா இல்லையா என்று உண்மை கண்டறிந்து வெளியிட வேண்டும்,’’ என, நமது வாசகர்கள் சிலர் முறையிட்டனர்.
உண்மை அறிவோம்:
சென்னைவாசிகள் மட்டுமின்றி சென்னைக்கு சுற்றுலா வருவோர் பலரும் செல்ல விரும்பும் இடங்களில் ஒன்று விஜிபி கோல்டன் பீச் (VGP Universal Kingdom). இங்கு, ‘சிலை மனிதன் என்ற பெயரில் அசையாமல் அப்படியே நிற்கும் மனிதர்’ என்ற கான்செப்ட் மிக பிரபலம். இந்த பணியை கடந்த பல ஆண்டுகளாக செய்து வந்தவர்தான் தாஸ்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, விஜிபி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டதால், வேலையிழந்து தவிக்கும் எத்தனையோ மனிதர்களில் இவரும் ஒருவர். 60 வயதாகும் தாஸ் தனது வாழ்க்கை பாதிப்பு பற்றி அண்மையில் ஊடகங்களில் கவலை தெரிவித்திருந்தார்.
தாஸ் பற்றி ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் அனைத்திலும் தலைப்பு ‘’ விஜிபியில் 30 வருடங்கள் சிலை மனிதராக இருந்தவரின் வாழ்வை சிதைத்த கொரோனா,’’ என்றே இருந்தது. இதனால், முழு செய்தியைக் கூட பார்க்காமல் வெறும் தலைப்பை வைத்தே உலக அரசியலை தீர்மானிக்கும் வல்லமை படைத்த சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் பலரும், தாஸ் இறந்துவிட்டார் எனக் கூறி தகவல் பகிர தொடங்கினர்.
இப்படித்தான் இந்த வதந்தி உருவாகி, ஆலமரம் போல கடந்த 24 மணிநேரமாக, கிளைகளை பரப்பி வருகிறது. உண்மையில், தாஸ் இறக்கவில்லை.
இதுபற்றி அவரது தன்னிலை விளக்கத்தை வீடியோவாக எடுத்து, அவர் பணிபுரியும் VGP Universal Kingdom நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
எனவே, உயிரோடு உள்ள ஒருவரை இறந்துவிட்டதாகக் கூறி தவறான தகவல் பரப்பி வருகின்றனர் என்று இதன்மூலமாக, தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை ஆய்வு செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:விஜிபி ‘சிலை மனிதன்’தாஸ் கொரோனா வைரஸ் பாதித்து இறக்கவில்லை!
Fact Check By: Pankaj IyerResult: False
