
‘’டாக்டர் என்ற பெயரில் காம லீலை செய்த நபரின் வீடியோ ஆதாரம்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

மஹ்மத் தாஜுதீன் என்பவர் கடந்த ஜூன் 24, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், சிசிடிவி கேமிரா காட்சி ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், டாக்டர் ஒருவர் சிகிச்சை தரும்போது திடீரென பெண் நோயாளி ஒருவர் எழுந்து அவரை பார்த்து கீழ்த்தரமாக வசைபாடுகிறார். ஆனால், அந்த டாக்டர் தவறு எதுவும் செய்யவில்லை. அவர் சிகிச்சைதான் தருகிறார். வீடியோவை பார்த்தாலே இது நன்றாக தெரிகிறது. இருந்தும், இதனை பகிர்ந்த நபர், ‘’டாக்டர் என்ற பெயரில் பல பெண்களை காம லீலை செய்யும் வீடியோ பதிவு,’’ எனக் குறிப்பிட்டுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்த குறிப்பிட்ட வீடியோ பதிவு, சமீபத்தில்தான் வெளியானது. இதில் உள்ள டாக்டரின் பெயர் சுதீர் குமார். தெலுங்கானா மாநிலம், வாரங்கல் பகுதியில் உள்ள பாலாஜி மருத்துவமனையில் பணிபுரியும் இவர் மீது, கடந்த மாதம் பெண் ஒருவர் பொய்யான புகார் அளித்திருந்தார். இதில் தொடர்புடைய வீடியோவையே மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளனர். இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதன்படி, கூகுளில் செய்தி ஆதாரம் தேடியபோது, பொய்ப்புகார் அளித்த பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளதாகவும், சுதிர் குற்றமற்றவர் எனவும் விவரம் தெரியவந்தது.

இதன்படி, தனிப்பட்ட விரோதம் காரணமாக, நாகேஸ்வர ராவ் என்பவர் சம்பந்தப்பட்ட டாக்டர் சுதிர் குமாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இத்தகைய சதித்திட்டம் தீட்டி, இதனை செய்ததாக, போலீஸ் விசாரணையில் தெளிவாக தெரியவந்துள்ளது. அந்த நபர், அதற்கு உடந்தையாக இருந்த பெண் உள்ளிட்ட 5 பேரையுமே போலீசார் கைது செய்துள்ளனர். இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுதவிர, ஒரு மருத்துவர் மீது தவறான புகார் அளித்ததற்காக, சம்பந்தப்பட்ட பெண் மீது இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐஎம்ஏ) வழக்கு தொடர்ந்துள்ளது. இதுபற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
கடந்த மாதம், தெலுங்கானா மாநிலத்தையே அதிர வைத்த இந்த வழக்கு பற்றி பாதிக்கப்பட்ட சுதிர் குமாரே ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இவை அனைத்திற்கும் மேலாக, இந்த வழக்கில், டாக்டர் சுதிர் குமார் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க உதவியதே, மேற்கண்ட சிசிடிவி காட்சிதான். அந்த காட்சி தெளிவாக இருந்ததன் அடிப்படையில்தான் சுதிர் குமார் குற்றமற்றவர் என்பதே உறுதி செய்யப்பட்டது. ஆனால், அவர் மீது குற்றம்சாட்டிய பெண் இஸ்லாமியர் போல இருப்பதால், உடனே வரிந்துகட்டிக்கொண்டு கண்மூடித்தனமாக அந்த வீடியோ பற்றி எதுவுமே தெரியாமல் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவர் செயல்பட்டுள்ளார். உண்மையில், அந்த பெண் இஸ்லாமியர் போல நடித்து, இந்த மோசடியை அரங்கேற்ற முயன்றுள்ளார். இதுதான் வழக்கின் உண்மை. மேலும், இதில் குற்றவாளிகள் யார் என்றும், டாக்டர் சுதிர் குமார் நேர்மையானவர் என்றும் நிரூபிக்கப்பட்டுவிட்டது.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், தவறான செய்தியை மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளனர் என்பது உறுதியாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:டாக்டர் என்ற பெயரில் காம லீலை செய்த நபர்: வீடியோ உண்மையா?
Fact Check By: Parthiban SResult: False
