மாடுகளுக்கு மாஸ்க் போடும்படி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டாரா?

Coronavirus அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

மாட்டுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மாஸ்க் அணிவிக்கும்படி உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டதாக தந்தி டி.வி நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

தந்தி டிவி நியூஸ் கார்டு போல ஒன்றை வெளியிட்டுள்ளனர். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் படம், உத்தரப்பிரதேச மாநில வரைபடம், பா.ஜ.க தேர்தல் சின்னம் ஆகியவை இதில் வைக்கப்பட்டுள்ளது. மாட்டுக்கு மாஸ்க் என்று தலைப்பிட்டுள்ளனர். மேலும், “கோரோனோ வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்க மாடுகளுக்கு மாஸ்க் அணிவிக்க முதல்வர் யோகி உத்தரவு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை, அஞ்சா சிங்கம் மருகுபாண்டி என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 மார்ச் 4ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

இதே போல், மாட்டுக்கு மாஸ்க் அணிவித்தது போன்ற படங்களும் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.  இந்த பதிவை, ஏ.எஸ் ஷாஜ கான் என்பவர் 2020 மார்ச் 4ம் தேதி வெளியிட்டுள்ளார். இதையும் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

Facebook LinkArchived Link



உண்மை அறிவோம்:

குளிர் காலத்தில் பசுக்களுக்கு கம்பளி, சிறப்பு மருத்துவ சிகிச்சை, யோகா செய்தால் கொரோனா வராது என்று தொடர்ந்து மீடியாக்களின் கவனத்தை ஈர்த்து வருபவர் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். அதனால், பசுக்களுக்கு மாஸ்க் என்ற தகவல் உண்மையாக இருக்கும் என்று எண்ணி பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

இந்த நியூஸ் கார்டு தந்தி டி.வி வெளியிடும் வழக்கமான நியூஸ் கார்டு இல்லை.

தந்தி டிவி நியூஸ் கார்டின் பாதி டிசைனை மட்டும் பயன்படுத்தி இந்த நியூஸ் கார்டை வெளியிட்டிருந்தனர். மிக முக்கியமாக தந்தி டி.வி லோகோ இதில் இடம் பெறவில்லை.

தந்தி டி.வி தொடர்ந்து கொரோனா வைரஸ் என்றே குறிப்பிட்டு வருகிறது. ஆனால், இந்த நியூஸ் கார்டில் கொரோனா என்பதற்கு பதில் “கோரோனோ” என்று உள்ளது. யோகி ஆதித்யநாத் என்று குறிப்பிடாமல், யோகி என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு உண்மையானது இல்லை என்பதை உறுதி செய்தன. தந்தி டி.வி வெளியிடும் நியூஸ் கார்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Facebook LinkArchived Link

இருப்பினும் இதை நிரூபிக்க ஆதாரங்கள் தேடினோம். முதலில், இந்த பதிவை அப்படியே தந்தி டிவி இணையப் பிரிவுக்கு அனுப்பி இது நீங்கள் வெளியிட்டதுதானா என்று கேட்டோம். அதற்கு அவர்கள் போலியானது என்று உறுதி செய்தனர்.

அடுத்ததாக, யோகி ஆதித்யநாத் இது தொடர்பாக ஏதாவது அறிவிப்பை வெளியிட்டுள்ளாரா என்று தேடினோம். அது தொடர்பாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

Search Link 1Search Link 2

இதன் அடிப்படையில், கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பசுக்களை பாதுகாக்க அவற்றுக்கு மாஸ்க் அணிவிக்கப்படும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாக பகிரப்படும் தந்தி டி.வி நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

அடுத்ததாக மாட்டுக்கு மாஸ்க் கட்டியிருக்கும் படங்கள் உண்மையா என்று ஆய்வு செய்தோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, இந்த படத்தை ஹிந்துஸ்தான் டைம்ஸ் 2017ம் ஆண்டே பயன்படுத்தியது தெரியவந்தது. பசுக்களின் முகத்தில் மாஸ்க் இல்லை. ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதை ஃபைல் புகைப்படம் என்று குறிப்பிட்டிருந்தது. இதனால், அசல் புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்று தேடினோம்.

hindustantimes.comArchived Link 1
gettyimages.inArchived Link 2

யோகி ஆதித்யநாத், பசுக்கள், கோரக்பூர் என்று பல்வேறு கீ வார்த்தைகளை பயன்படுத்தி கூகுளில் தேடியபோது, அசல் படம் நமக்கு கிடைத்தது. கெட்டிஇமேஜஸ் என்ற இணையதளம் இந்த புகைப்படத்தை விற்பனைக்கு வைத்திருப்பது தெரியவந்தது. அந்த தளத்துக்குச் சென்று பார்த்தோம். 2017ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி இந்த படம் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் இந்த புகைப்படம் பொய்யானது என்பது உறுதியானது.

நம்முடைய ஆய்வில்,

தந்தி டிவி பெயரில் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாட்டுக்கு மாஸ்க் மாட்டிய படம் போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாட்டுக்கு மாஸ்க் மாட்ட உத்தரவிட்டதாக மார்ச் 5, 2020 வரை எந்த ஒரு உத்தரவையும் யோகி பிறப்பிக்கவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், மாட்டுக்கு மாஸ்க் மாட்ட யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டதாக பகிரப்படும் பதிவு தவறானது என்றும் மாட்டுக்கு மாஸ்க் மாட்டப்பட்ட படம் போலியானது என்றும் உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:மாடுகளுக்கு மாஸ்க் போடும்படி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False