
ஸ்டாலின் விபூதி விவகாரம் தொடர்பாக தி.மு.க பேச்சாளர் தமிழன் பிரசன்னா வெளியிட்ட ட்வீட் என்று ஒரு பதிவு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
தி.மு.க செய்தித் தொடர்பு இணை செயலாளராக உள்ள வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா ட்வீட் என்று ஒரு புகைப்பட பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அதில், “விபூதியை நெற்றியில் பூசினால் தான் ஓட்டு விழும் என்றால் அப்படி விழும் ஓட்டு தேவையில்லை என்று தட்டிவிட்டு ஜாதி வெறியர்களின் கோட்டையில் கெத்து காட்டிய திராவிட தலைவன் தளபதி அவர்கள்” என்று உள்ளது.
நிலைத் தகவலில், “குரங்கு தன் குட்டியை விட்டு ஆழம் பார்த்த கதை இது… டுமிலன் பிரசன்னா எங்க தேர்தல் பிரச்சாரத்தில் இதை பேசேன் பார்ப்போம்…” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பதிவை Pugal Machendran Pugal என்பவர் 2020 நவம்பர் 2ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அரசியல் கட்சிகள் ஓட்டு வேண்டாம் என்று கூறுவது இல்லை. அதே நேரத்தில் இந்த சமூகத்தினர் ஓட்டு தேவையில்லை, அந்த சமயத்தவர்கள் ஓட்டு தேவையில்லை என்று தி.மு.க கூறியதாக அவ்வப்போது சமூக ஊடகங்களில் புரளி பரப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் கொடுக்கப்பட்ட திருநீறு மு.க.ஸ்டாலின் கீழே கொட்டிவிட்டார் என்று ஒரு புகைப்படத்தைப் போட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அந்த படத்தை தி.மு.க நிர்வாகி தமிழன் பிரசன்னா ஷேர் செய்து, விபூதி பூசினால்தான் ஓட்டு விழும் என்றால் அப்படி விழும் ஓட்டு தேவையில்லை என்று கூறியதாக குறிப்பிட்டு பகிரப்பட்டு வருகிறது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
‘கெத்து’ என்பதற்கு பதில் ‘கொத்து’ என்று எழுத்துப் பிழை வேறு உள்ளது. இப்படி பகிரங்கமாக குறிப்பிட்ட சமூக வாக்குகள் வேண்டாம் என்று யாராவது கூறுவார்களா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
முதலில், தமிழன் பிரசன்னா ட்விட்டர் பக்கத்தை ஆய்வு செய்தோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவில் கெத்து என்பதற்கு ‘கொத்து’ என பிழையாக இருந்த பகுதியை வட்டமிட்டு காட்டி தமிழன் பிரசன்னா ட்வீட் வெளியிட்டிருந்தார். அதில், “ஃபோட்டோ ஷாப்க்கு பிறந்த சங்கிகளுக்கு…. அது கொத்து இல்ல “கெத்து” ஃபோட்டோ ஷாப்பையாவது ஒழுங்கா பண்ணுங்கடா மூதேவிங்களா” என்று கூறியிருந்தார்.
இதன் மூலம் இந்த பதிவை தான் வெளியிடவில்லை, போட்டோஷாப் முறையில் விஷமிகள் போலியாக உருவாக்கி வெளியிட்டுள்ளார் என்பதை அவர் கூறுவது தெரிகிறது.

அதே நேரத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் கமெண்ட் செய்த பலரும், இது போலியானது என்று குறிப்பிட்டிருந்தனர். அவருடைய ட்விட்டர் பக்கத்தில் இது போன்ற பதிவு இல்லை என்றும் கூறியிருந்தனர். ஆனால், பதிவை வெளியிட்ட Pugal Machendran Pugal என்பவர் தமிழன் பிரசன்னா ட்விட்டை வெளியிட்டுவிட்டு அதை அகற்றிவிட்டார் என்று கூறியிருந்தார்.
இது குறித்து தமிழன் பிரசன்னாவை தொடர்புகொண்டு பேசினோம். “நான் அந்த பதிவை போடவில்லை. நான் ட்வீட் செய்தது போல போலியாக ஒரு ட்வீட் பரப்புகின்றனர். அதனால்தான் என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அது பற்றி பதிவிட்டிருந்தேன். அப்படி ஒரு பதிவு போடவோ, அழிக்கவோ இல்லை” என்றார்.
ஒருவரின் ட்விட்டர் அக்கவுண்ட், பெயரை வைத்து போலியாக பதிவுகளை உருவாக்க ஏராளமான தளங்கள் உள்ளன. இந்த பதிவை வெளியிடவில்லை என்று தமிழன் பிரசன்னா உறுதி செய்துள்ளார். இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் தி.மு.க பிரமுகர் தமிழன் பிரசன்னா பெயரில் பரவும் ட்வீட் பதிவு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவு உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:ஸ்டாலின் விபூதி விவகாரம்- தமிழன் பிரசன்னா பெயரில் பரவும் போலி ட்வீட்!
Fact Check By: Chendur PandianResult: False
