FACT CHECK: இலவச ஆம்புலன்ஸ் திட்டத்துக்கு கட்டணம் நிர்ணயித்ததா தமிழக அரசு?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

இதுவரை இலவசமாக இருந்த ஆம்புலன்ஸ் சேவைக்கு தமிழக அரசு கட்டணம் நிர்ணயித்துள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive 

பாலிமர் தொலைக்காட்சி நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ஆம்புலன்ஸ் கட்டணம் நிர்ணயம் கொரோனா நோயாளிகளை அழைத்துச் செல்ல சாதாரண ஆம்புலன்ஸ்களுக்கு முதல் 10 கிலோ மீட்டருக்கு ரூ.1500 கட்டணம்” என்று இருந்தது.

நிலைத் தகவலில், “நேற்று வரை இலவசமாக இருந்த ambulance இன்று முதல் கட்டணம் ??? 10 வரை 1500 ? 20 வரை 2000? விடியல் ???” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை விஜய் குமரேசன் என்பவர் 2021 மே 14ம் தேதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

அக்னி குருதி என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் “இனி ஆம்புலன்ஸ் க்கு கட்டணம்  10 கிலோமீட்டர் க்கு சாதாரண ஆம்புலன்ஸ் க்கு 1500.  ஆக்சிஜனோடு கூடிய ஆம்புலன்ஸ் க்கு 2000. வென்டிலேட்டார் கொண்ட ஆம்புலன்ஸ் க்கு 4000 ரூபாய்  இது அல்லவா மக்களுக்கான ஆட்சி 😘 நீங்கள் கொரானோ நிவாரண நிதியாக கொடுக்கும் 2000 ரூபாய் உங்களுக்கே திருப்பி தருகிறோம்  இலவச ஆம்புலன்ஸ் நம்பி தான் இன்னைக்கு பல ஏழை குடும்பங்கள் இருக்கு  இப்படி ஒரு இக்கட்டான சூழலில் இது மக்கள் மீது திணிக்கப்படும் சுமை  #விடியலில்_தமிழகம்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 

உண்மை அறிவோம்:

கொரோனா பெருந்தொற்று காரணமாக நாளுக்கு நாள் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கச் சிலர் முயற்சிக்கும் அநியாயங்களும் நடந்து வருகின்றன. உயிர்காக்கும் மருந்து, ஆக்சிஜனை கள்ளச் சந்தையில் அநியாய விலைக்கு விற்பனை செய்ததாகப் பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதே போல், மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்துச் செல்ல தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் 10 ஆயிரம், 20 ஆயிரம் ரூபாய் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்தன. 

அரசு 108 ஆம்புலன்ஸ் சேவை இலவசமாக வழங்கி வருகிறது. தனியார்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாகப் புகார் வந்த நிலையில், தனியார் ஆம்புலன்ஸ்கள் கட்டணம் வசூல் செய்வதைக் கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. 

இந்த நிலையில் சமூக ஊடகங்களில் பலரும் இதுவரை இலவசமாக இருந்த ஆம்புலன்ஸ் சேவைக்கு அரசு கட்டணம் நிர்ணயித்தது என்றும், தனியார் என்ற வார்த்தையை மறைத்துவிட்டு ஆம்புலன்ஸ்களுக்கு கட்டணம் என்ற வகையிலும் பதிவிட்டு வருகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தமிழக அரசின் அரசாணையைப் பார்த்தோம். அதன் தலைப்பிலேயே மிகத் தெளிவாக தனியார் ஆம்புலன்ஸ் கட்டணம் நிர்ணயம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த அரசாணையைப் படித்துப் பார்த்தோம். அப்போது, தமிழ்நாடு சுகாதார கட்டமைப்பு திட்டத்தின் திட்ட இயக்குநர் 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் கொரோனா நோய் பாதித்த நோயாளிகளை மருத்துவமனைக்கு, ஆய்வகங்களுக்கு அழைத்துச் செல்லுதல் போன்ற பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 108, 104 போன்ற எண்களுக்கு வரும் அழைப்பு அடிப்படையில் இந்த சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.

அசல் பதிவைக் காண: twitter.com I Archive

108 சேவையின் முழு செயல்பாட்டையும் தாண்டி தேவை அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நோயாளிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்று திட்ட இயக்குநர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது, என்று அதில், குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதன் மூலம் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதியானது.

அரசாணை அடிப்படையில் பல்வேறு ஊடகங்கள் வெளியிட்ட செய்தியும் நமக்குக் கிடைத்தன. தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்குக் கட்டணம் நிர்ணயம் என்றே அனைத்திலும் குறிப்பிடப்பட்டிருந்தது. இலவச 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு கட்டணம் என்று எந்த ஒரு ஊடகத்திலும் செய்தி வெளியாகவில்லை.

அசல் பதிவைக் காண: dinamalar.com I Archive 1 I dinamani.com I Archive 2

அடுத்ததாக, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பாலிமர் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு உண்மையா என்று ஆய்வு செய்தோம். 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை வாகனத்தின் புகைப்படத்துடன் இந்த நியூஸ் கார்டு உருவாக்கப்பட்டு இருந்தது. எனவே, இந்த நியூஸ் கார்டை பார்க்கும் அனைவருக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கும் கட்டணமா என்ற சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாததாக உள்ளது.

பாலிமர் தொலைக்காட்சியின் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களை ஆய்வு செய்தபோது அதில் இந்த நியூஸ் கார்டு இல்லை. பாலிமர் தொலைக்காட்சியின் பிரேக்கிங் நியூஸ் கார்டையும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டையும் ஒப்பிட்டு பார்த்தோம். அப்போது அதில் “BREAKING” என்ற வார்த்தையில் “G” இல்லாமல் இருப்பதைக் காண முடிந்தது. எனவே, இது போலியானது என்று உறுதியானது.

இருப்பினும் இந்த நியூஸ் கார்டில் உள்ள தமிழ் ஃபாண்ட் கிட்டத்தட்ட பாலிமர் தொலைக்காட்சியில் பயன்படுத்தும் ஃபாண்ட் போல இருக்கிறது. எனவே, பாலிமர் தொலைக்காட்சியைத் தொடர்பு கொண்டு இது உண்மையான நியூஸ் கார்டா என்று கேட்டோம். அப்போது அவர்கள், இது போலியானது, என்றனர்.

நம்முடைய ஆய்வில், பாலிமர் தொலைக்காட்சி நியூஸ் கார்டு உண்மையானது இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசாணையில் தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு கட்டணம் நிர்ணயம் என்று இருப்பது தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் இதுநாள் வரை இலவசமாக வழங்கப்பட்டு வந்த ஆம்புலன்ஸ் சேவைக்கு தமிழக அரசு கட்டணம் நிர்ணயித்துள்ளது என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தமிழகத்தில் இலவச ஆம்புலன்ஸ்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:இலவச ஆம்புலன்ஸ் திட்டத்துக்கு கட்டணம் நிர்ணயித்ததா தமிழக அரசு?

Fact Check By: Chendur Pandian 

Result: False