
கோவையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலின் போது ஒரே ஒரு வாக்கு வாங்கிய கார்த்திக்கை கோவை மாநகராட்சிக்கான மேயர் வேட்பாளராக அண்ணாமலை அறிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய இணைய ஊடகம் ஒன்றின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கொடுத்த வாக்கைக் காப்பாற்றிய தலைவர் கோவை மேயர் வேட்பாளராக ஒரு ஓட்டு வாங்கிய கார்த்திக் – மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பு” என்று இருந்தது. இந்த பதிவை Manoharan Karthik Karthik Kumar என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜனவரி 31ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
கடந்த 2021 அக்டோபர் மாதம் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலின் போது கோவை மாவட்டம் குருடம்பாளையம் ஊராட்சியின் 9வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு கார்த்திக் என்ற நபர் போட்டியிட்டு ஒரே ஒரு வாக்கு வாங்கியிருந்தார். அந்த தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் பாஜக இருந்தது. அந்த வார்டில் அ.தி.மு.க சார்பில் ஒருவர் பேர்டியிட்டிருந்தார். வார்டு உறுப்பினர் தேர்தல் என்பதால் பாஜக-வை சேர்ந்த கார்த்திக் தனியாகப் போட்டியிட்டிருந்தார். கார்த்திக் ஒரே ஒரு வாக்கு வாங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கார்த்திக்குக்கு அடுத்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு பா.ஜ.க அறிவித்திருந்தது.
இந்த சூழலில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மேயர் வேட்பாளராக ஒரு ஓட்டு வாங்கிய கார்த்திக் பெயரைத் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்ததாக சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது போல் உள்ளது. எனவே, கதிர் என்ற இணைய ஊடகம் வெளியிட்ட நியூஸ் கார்டுகளை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்வையிட்டோம். அப்போது, இந்த நியூஸ் கார்டை அந்த ஊடகம் வெளியிடவில்லை என்பது தெரிந்தது. மேலும், இந்த நியூஸ் கார்டு போலியானது என்று “FAKE” முத்திரை குத்தி கதிர் நியூஸ் பதிவு வெளியிட்டிருந்தது.
இதன் மூலம் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒரு ஓட்டு வாங்கிய கார்த்திக் என்பவரைக் கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக அண்ணாமலை அறிவித்தார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதியாகிறது.
முடிவு:
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒரு ஓட்டு வாங்கிய நபரை கோவை மாநகர மேயர் வேட்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்ததாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:ஒரு ஓட்டு வாங்கிய நபரை கோவை பாஜக மேயர் வேட்பாளராக அறிவித்தாரா அண்ணாமலை?
Fact Check By: Chendur PandianResult: False
