திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவ் மாட்டு சாணத்தை குடித்து, குளித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

ஒருவர் மாட்டுச் சாணத்தைக் குடித்துவிட்டு, குளிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் உள்ளவர், இந்தியில் ஏதோ கூறிவிட்டு சாணத்தை குடித்துவிட்டு, குளிக்கிறார். நடு நடுவே மா மா என்று கத்துகிறார். வீடியோ எடுப்பவர்களையும் கத்தச் சொல்கிறார். வீடியோ எடுப்பவர்கள் சிரித்துக்கொண்டே மா என்று கத்துகின்றனர். நிலைத் தகவலில், "திரிபுராவில் பாஜக முதல்வர் "பிப்லப் குமார் தேவ்" கொரோனாவை உலகிலேயே மிகவும்

அதி நவீனமான சிகிச்சை மூலம் விரட்டும் காட்சி. மாட்டுச் சானி குளியல். இந்த விஞ்ஞானிகள் ஆட்சி செய்கின்ற நாட்டில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..." என்று கூறப்பட்டுள்ளது.

இந்த பதிவை Rrpestcontrol Raja என்பவர் 2021 ஏப்ரல் 30 அன்று பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

படத்தில் இருக்கும் நபரைப் பார்க்கும் போது திரிபுரா முதல்வர் பிப்லவ் குமார் தேவ் போல இல்லை. இருவருக்கும் இடையே துளி கூட உருவ ஒற்றுமை இல்லை. அப்படி இருக்கும்போது எதன் அடிப்படையில் இந்த நபர் திரிபுரா முதல்வர் என்று பரப்புகிறார்களோ தெரியவில்லை.

பிப்லவ் குமார் ஏதும் பசு சாணி குளியல் மேற்கொண்டாரா, அது தொடர்பான செய்தி, வீடியோ எதுவும் உள்ளதா என்று முதலில் கூகுளில் தேடினோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.

வீடியோவில் இருக்கும் நபர் யார், இந்த வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்று தேடினோம். அப்போது பல மாதங்களுக்கு முன்பு இந்த வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. அந்த வீடியோக்களில் இந்த நபர் உ.பி-யைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டிருந்தனர். இருப்பினும் இவர் யார், எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று எந்த தகவலும் அந்த வீடியோக்களில் இல்லை. அதே நேரத்தில் 2020 நவம்பரில் வெளியான வீடியோ ஓன்றில் இந்து மத வழிபாட்டுக்காக இவர் இப்படி செய்வதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

YouTube Link 1 I YouTube Link 2

வீடியோவை பார்க்கும்போது அதில் இந்தியில் எழுதப்பட்ட பேனர் ஒன்று இருப்பதைக் காண முடிந்தது. தெளிவில்லாமல் அந்த பேனர் இருந்தது. அது இந்தியில் எழுதப்பட்டது தானா, வீடியோவில் பேசுபவர்கள் இந்தியில்தான் பேசுகிறார்களா என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்திப் பிரிவைத் தொடர்புகொண்டு கேட்டோம்.

அவர்கள், "இந்த நபர் இந்தியில் பேசுகிறார். பேச்சு வழக்கு உத்தரப்பிரதேசத்தை சார்ந்தவர் போல உள்ளது. பேனரில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று படிக்க முடியவில்லை. இவர் தன்னை பசு பாதுகாவலர் என்றும், அதனால் இப்படி செய்வதாகவும் கூறிக்கொள்கிறார். நிச்சயமாக இவர் திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவ் இல்லை" என்றனர்.

கடைசியாக இந்த நபருக்கும் திரிபுரா முதல்வருக்குமான உருவ ஒற்றுமையை ஒப்பிட்டுப் பார்த்தோம். இருவருடைய புகைப்படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்த போது இவர் பிப்லப் குமார் தேவ் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. இதன் அடிப்படையில், திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவ் பசு சாணி குளியல் மேற்கொண்டார் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

திரிபுரா முதல்வர் பிப்லப் சாணிக் குளியல் மேற்கொண்டார் என்று பரவும் வீடியோவில் உள்ளவர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பசு காவலர் என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:திரிபுரா முதல்வர் பிப்லப் மாட்டுச் சாண குளியல் மேற்கொண்டதாக பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False