
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட காசி என்பவரின் தந்தை சமீபத்தில் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். அவர் பா.ஜ.க-வில் இணைந்ததாகவும் அவருக்கு கலாச்சார அணி மாவட்ட துணை செயலாளர் பதவி வழங்கப்பட்டதாகவும் ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜகவில் இணைந்த காசியின் தந்தை. பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நாகர்கோவில் காசியின் தந்தை தங்கபாண்டியன் பாஜகவில் இணைந்தார். கன்னியாகுமரி மாவட்ட கலாச்சார அணியின் துணை செயலாளராக நியமனம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை Vijay Dhanasekar என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஆகஸ்ட் 25ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
பல பெண்களிடம் பழகி அவர்களுடன் அவர்களுடன் இருக்கும் காட்சியை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டியதாக கைது செய்யப்பட்டவர் நாகர்கோவிலைச் சார்ந்த காசி. அவரது தந்தை தங்க பாண்டியனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு சமீபத்தில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஜாமீனில் வெளியே வந்த காசியின் தந்தை தங்க பாண்டியன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததாகவும் உடனடியாக அவருக்கு மாவட்ட அளவில் கலாச்சார பிரிவில் பொறுப்பு வழங்கப்பட்டதாகவும் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அப்படி எந்த ஒரு அறிவிப்பும் வெளியானதாக செய்தி இல்லை. எனவே, இந்த நியூஸ் கார்டு தொடர்பாக ஆய்வு செய்தோம்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டின் தமிழ் ஃபாண்டும், தந்தி டிவி வெளியிடும் நியூஸ் கார்டின் தமிழ் ஃபாண்ட்டும் ஒன்றாக இருந்தது. ஆனால், தகவல் பகுதி மட்டும் தனியாக வெட்டி எடுத்து, புதிதாக சேர்க்கப்பட்டிருந்தது. எனவே, இது போலியானது என்று தெரிந்தது.
தந்தி டிவியின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஆகஸ்ட் 24, 2022 அன்று வெளியான நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற நியூஸ் கார்டை தந்தி டிவி வெளியிட்டிருந்தது தெரிந்தது. ஆனால் அதில், “நாகர்கோவில் காசியின் தந்தைக்கு ஜாமீன். பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நாகர்கோவில் காசியின் தந்தை தங்க பாண்டியனுக்கு ஜாமீன். நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது தெரிந்தது.

இதை உறுதி செய்துகொள்ளத் தந்த டிவி டிஜிட்டல் பிரிவு நிர்வாகிக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பினோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.
தமிழ்நாடு பா.ஜ.க-வில் காசியின் தந்தைக்குப் பொறுப்பு வழங்கப்பட்டதா என்று அறிய அதன் சமூக ஊடக பக்கங்களைப் பார்வையிட்டோம். அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. எனவே, தமிழ்நாடு பாஜக ஐடி., பிரிவு நிர்வாகி ஒருவரைத் தொடர்புகொண்டு இந்த தகவல் பற்றி கேட்டோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.
முடிவு:
நாகர்கோவில் காசியின் தந்தை பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததாகவும் அவருக்கு கன்னியாகுமரி மாவட்ட கலை கலாச்சார பிரிவின் துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட காசியின் தந்தைக்கு பா.ஜ.க-வில் பதவி வழங்கப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult: False
