
இஸ்லாத்தைப் பற்றித் தரக்குறைவாக பேசிக் கொண்டிருக்கும் போதே குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் ஆனார் என்று செய்தி வெளியாகி உள்ள நிலையில், இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மேடையில் பேசிக் கொண்டிருக்கிறார். லவ் ஜிகாத் என்று அவர் சொன்ன போது அனைவரும் கைதட்டி, ஜெய் ஶ்ரீராம் என்று கோஷம் எழுப்புகின்றனர். தொடர்ந்து பேச முடியாமல் விஜய் ரூபானி மேடையில் மயங்கி விழுந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இறைவனின் பிடி மிகவும் கடுமையானது. (அல்குர்ஆன் ) இஸ்லாத்தை பற்றி தரைகுறைவாக பேசி கொண்டு இருக்கும் போதே உயிர் பிரிந்த குஜராத் முதல் மந்திரி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ பதிவை இஸ்லாமியம் உலகின் வேகமாக வளர்ந்து வரும் மதம் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 பிப்ரவரி 18 அன்று வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குஜராத் மாநிலம் வதோதராவில் கடந்த 2021 பிப்ரவரி 14ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மேடையில் பேசும் போது மயங்கி விழுந்தார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு அவருக்கு கொரோனா நெகட்டிவ் என்று வரவே, உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்தார் என்று செய்தி வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், விஜய் ரூபானி இறந்துவிட்டார் என்று பலரும் வீடியோவை பகிர்ந்து வரவே இது தவறானது என்பதை உறுதி செய்வதற்கான ஆய்வை நடத்தினோம்.
முதலில் அவர் மயங்கி விழுந்த வீடியோவைத் தேடினோம். இது தொடர்பாக முன்னணி ஊடகங்கள் அனைத்தும் செய்தி மற்றும் வீடியோவை வெளியிட்டிருந்தன. என்.டி.டி.வி வெளியிட்டிருந்த செய்தியில் “மேடையில் மயங்கி விழுந்த விஜய் ரூபானி. மேடையில் வைத்து அவருக்கு முதல் உதவி சிகிச்சை வழங்கப்பட்டது. உடனடியாக அகமதாபாத் அழைத்து வரப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்” என்று இருந்தது.
அசல் பதிவைக் காண: ndtv.com I Archive
இந்துஸ்தான் டைம்ஸில் குஜராத் துணை முதல்வர் நிதின் பட்டேல் கூறியதாக செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதில், “விஜய் ரூபானிக்கு கொரோனா பாசிடிவ் உறுதியாகி உள்ளது. அவர் ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார்” என்று கூறியதாக குறிப்பிட்டிருந்தனர்.
அசல் பதிவைக் காண: hindustantimes.com I Archive
இதைத் தொடர்ந்து பிப்ரவரி 21ம் தேதி வெளியான செய்தியில், “விஜய் ரூபானிக்கு கொரோனா நெகட்டிவ் உறுதியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலில் தன்னுடைய வாக்கை அவர் பதிவு செய்தார்” என்று குறிப்பிட்டிருந்தனர்.
அசல் பதிவைக் காண: newindianexpress.com I Archive 1 I dailythanthi.com I Archive 2
இதற்கிடையே அவருடைய ட்விட்டர் பக்கத்தை ஆய்வு செய்தோம். பிப்ரவரி 18ம் தேதி மருத்துவமனையில் இருந்தபடி தேர்தல் பிரசாரம் தொடர்பாக அவர் வீடியோ வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
இன்று கட்டுரை தயாரான (பிப்ரவரி 24, 2021) அன்று குஜராத்தில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் பற்றிய பதிவை அவர் ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். மேலும் தேர்தல் பிரசார வீடியோக்கள் பலவற்றையும் அவர் வெளியிட்டிருந்தார்.
இதன் மூலம் உடல்நலக் குறைவு காரணமாக குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மயங்கி விழுந்த வீடியோவை எடுத்து, உயிரிழந்துவிட்டார் என்று விஷமத்தனமாக பகிர்ந்து வருவது உறுதியாகிறது.
முடிவு:
குஜராத் முதல்வர் உயிரிழந்தார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மேடையிலேயே மரணம் எனப் பரவும் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False
