FACT CHECK: விவசாய போராட்டத்தில் சீக்கியர் வேடத்தில் பங்கேற்ற இஸ்லாமியர்; உண்மை என்ன?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் சீக்கியர் போல வேடம் அணிந்து பங்கேற்ற இஸ்லாமியர் என்று கூறி ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

சீக்கியர் ஒருவர் இஸ்லாமியர் போல தொழுகை செய்யும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விவசாய போராட்டத்தில் அவ்வளவு பிசியாக இருப்பதால் வேஷத்தைக் கலைக்க டைம் கிடைக்கவில்லையாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை கால்டுவெல் ஜீ என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 ஜனவரி 24ம் தேதி வெளியிட்டுள்ளார். ஆயிரக் கணக்கானோர் இதை ஷேர் செய்துள்ளனர்.

உண்மை அறிவோம்:

விவசாயிகள் போராட்டத்தில் உண்மையான விவசாயிகள் பங்கேற்கவில்லை என்று காட்டுவதற்காக தொடர்ந்து பல பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்கள்தான் சீக்கியர்கள் போல வேடமிட்டு போராட்டத்தில் பங்கேற்றனர் என்று தொடர்ந்து பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கூட ஏற்கனவே கட்டுரை வெளியிட்டுள்ளோம். இந்த நிலையில் இந்த புகைப்படத்தையும் ஏராளமானோர் ஷேர் செய்து வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டத்தில் டர்பன் அணிந்து இஸ்லாமியர் பங்கேற்றாரா?

விவசாயிகள் போராட்டத்தில் சீக்கியர் வேடத்தில் இஸ்லாமியரா?

இந்த புகைப்படம் டெல்லியில் 2020 – 21 விவசாயிகள் போராட்டத்தின்போது எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். பல ஃபேக்ட் செக் ஊடகங்கள் இது தொடர்பாக ஆய்வு நடத்தியிருப்பது தெரிந்தது. அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு நாம் ஆய்வு செய்தோம். அப்போது இந்த புகைப்படம் 2010ம் ஆண்டே சீக்கியர்கள் பக்கம் ஒன்றில் பதிவிட்டது போன்று ஒரு செய்தி கிடைத்தது.

அந்த இணையதள பக்கத்துக்கு சென்று பார்த்தோம். அதில், சீக்கியர்கள் தொழுகையில் ஈடுபடலாமா என்ற கேள்விக்கு பலரும் பதில் அளித்திருந்தனர். இந்த கேள்விதான் 2010ம் ஆண்டு கேட்கப்பட்டிருந்தது. அதற்கு இந்த புகைப்படத்துடன் கூடிய ஃபேஸ்புக் பதிவின் ஸ்கிரீன்ஷாட்டை 2016ம் ஆண்டு ஒருவர் பதிவிட்டிருப்பது நமக்கு கிடைத்தது. அந்த படத்தில் உள்ள ஃபேஸ்புக் ஐடி-யை கண்டுபிடித்து அதில் தேடினோம். 

அப்போது, 2016ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி இந்த புகைப்படத்தை ஒருவர் வெளியிட்டிருப்பது தெரிந்தது. அதில், “ஜூம்மா தினத்தன்று சீக்கியர் ஒருவர் மசூதிக்குள் வந்து தொழுகையில் ஈடுபட்டார். ஆச்சரியப்படும் வகையில் அவர் அனைவர் முன்னிலையிலும் அல்லாஹு அக்பர் என்று கூறி தொழுதார். இந்த அழகிய மதத்தை அல்லா உலகம் முழுக்க பரவச் செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தனர். இது எங்கே எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை. ஜூம்மா தினம் என்றால் வெள்ளிக்கிழமை தொழுகை என்று பொருள் என கூகுளில் தேடியபோது தெரிந்தது. 

அசல் பதிவைக் காண: Facebook I Archive

இந்த புகைப்படம் 2016ம் ஆண்டே பதிவிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த பதிவில் ஏதும் திருத்தம் செய்யப்பட்டுள்ளதா, புதிதாக புகைப்படத்தை மாற்றியுள்ளார்களா என்று அறிய, அந்த பதிவு எப்போது எல்லாம் எடிட் செய்யப்பட்டது என்று பார்த்தோம். 2016 ஜனவரி 31 அன்று வெளியிடப்பட்ட தினத்தில் ஒரு முறை எடிட் செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தனர். எனவே, இந்த படம் 2016ம் ஆண்டு வெளியிடப்பட்டதுதான் என்பது உறுதியானது.

விவசாயிகள் போராட்டம் என்பது 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு வேளாண் சட்டத்தைக் கொண்டு வந்தத்தில் இருந்துதொடங்கியது. அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. எனவே, இதற்கும் விவசாயிகள் போராட்டத்துக்கும் தொடர்பில்லை என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சீக்கியர் தொழுகையில் ஈடுபட்ட படம் 2016ம் ஆண்டு சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:விவசாய போராட்டத்தில் சீக்கியர் வேடத்தில் பங்கேற்ற இஸ்லாமியர்; உண்மை என்ன?

Fact Check By: Chendur Pandian 

Result: False