குஜராத் மருத்துவமனையின் அவலம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

குஜராத் மருத்துவமனையில் சிறுமி ஒருவருக்கு தரையில் அமர வைத்து ரத்தம் ஏற்றப்படுகிறது என்று பகிரப்படும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

குஜராத் மருத்துவமனையில் என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தில், சிறுமி ஒருவர் தரையில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு ரத்தம் ஏற்றப்படுகிறது. ரத்தம் நிறைந்த பையை அவரது தாயார் தன் கைகளால் உயர்த்தி பிடித்தபடி இருக்கிறார். நிலைத் தகவலில், “உலகிலேயே மிக உயரமான படேல் சிலை இருக்கும் மாநிலத்தில் எடுத்த படம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த புகைப்படத்தை E N Sankar என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 மார்ச் 15ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

உலகிலேயே உயரமான படேல் சிலை குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது. ஆனால், அங்குள்ள மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லை என்பது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இந்த தகவல் உண்மையா, என்ன நடந்தது என்பதை அறிய ஆய்வு செய்தோம்.

புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த சம்பவம் குஜராத்தில் நடக்கவில்லை, மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது என்று தெரிந்தது. கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் மாதம் இந்த சம்பவம் தொடர்பாக பல ஊடகங்களில் புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியாகி இருந்தது. 

என்டிடிவி வெளியிட்டிருந்த செய்தியைப் பார்த்தோம். மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சட்னா என்ற மாவட்டத்தில் உள்ள பொது மருத்துவமனையில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சிறுமிக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளது. இதனால், ரத்தம் ஏற்றும்படி பரிந்துரைத்துள்ளனர். மருத்துவமனைக்கு வந்த போது படுக்கை எதுவும் காலியாக இல்லை என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

உண்மைப் பதிவைக் காண: ndtv.com I Archive 1 I deccanherald.com I Archive 2

இதனால் சிறுமியை தரையில் அமரவைத்து அவருக்கு ரத்தம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ரத்தம் நிறைந்த பையைச் சிறுமியின் தாயார் உயர்த்தி பிடித்துள்ளார். இந்த காட்சியைப் புகைப்படம் எடுத்து சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். இது சமூக ஊடகங்களில் வைரல் ஆகவே, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ஒரு ஊதிய உயர்வுக்குத் தடை விதித்து ஆட்சியர் உத்தரவிட்டதாக செய்தியில் கூறப்பட்டிருந்தது.

சிறுமியை தரையில் அமர வைத்து ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் உண்மைதான். ஆனால், இந்த சம்பவம் குஜராத்தில் நடைபெறவில்லை. மத்தியப் பிரதேசத்தில் நடந்தது என்று குறிப்பிட்டுப் பதிவிட்டிருந்தால் தவறாக இருந்திருக்காது. நம்முடைய ஆய்வில் இந்த புகைப்படம் மத்தியப் பிரதேசத்தில் எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

குஜராத் மருத்துவமனையில் சிறுமி ஒருவருக்கு தரையில் அமர வைத்து ரத்தம் ஏற்றப்பட்டது என்று பகிரப்படும் புகைப்படம் மத்தியப் பிரதேசத்தில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:குஜராத் மருத்துவமனையின் அவலம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False