
அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த கலவரத்தின் போது காவிக் கொடியோடு இந்தியர்கள் பங்கேற்றார்கள் என்பது போல ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2 I Facebook 3 I Archive 3
டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டது தொடர்பான புகைப்பட பதிவு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், காவிக் கொடி மற்றும் அமெரிக்க கொடியோடு இந்தியர் ஒருவர் நிற்கிறார். அந்த பதிவில், “அமெரிக்க நாடாளுமன்றத்தில் வெறிபிடித்த ட்ரம்ப் ஆதரவு கும்பல் அரங்கேற்றியிருக்கும் வன்முறை – கலவரம்.
நவீன பாசிசம் நாடாளுமன்றத்தின் உயிரை உருவி, ஜனநாயகத்தை உயிரற்ற வெறும் கூடாக மாற்றுகிறது – பேராசிரியர் விஜயபிரசாத், மார்க்சிய அறிஞர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Theekkathir என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 ஜனவரி 8ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
மற்றொரு பதிவில், “கலவரம் எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கு நீங்க காணலாம் காவி, அமெரிக்கா, டிரம்ப்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை Mohamed Shajahan என்பவர் 2021 ஜனவரி 7 அன்று வெளியிட்டுள்ளார்.
உண்மை அறிவோம்:
அமெரிக்க தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்தாலும், அதை ஏற்க மறுத்து அவர் செய்துவரும் அட்டகாசங்களால் அந்நாட்டில் பதற்றம் நிலவுகிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தை டிரம்ப் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். அவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் அமெரிக்க கலவரத்தின் புகைப்படம் என்று நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. படத்தில் மொத்தமே மூன்று பேர்தான் உள்ளனர். மிகப்பெரிய அளவில் டிரம்ப் ஆதரவாளர்கள் திரண்டு வந்து போராட்டம் நடத்தியதாக புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியான சூழலில் இதில் மூன்று பேர் மட்டுமே இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அசல் பதிவைக் காண: bbc.com I Archive
எனவே, இந்த புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த புகைப்படம் இப்போது எடுக்கப்பட்டது இல்லை என்று தெரிந்தது. அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா நடந்த போது அமெரிக்காவில் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாக அப்போது வெளியான செய்திகளில் இந்த புகைப்படம் இடம் பெற்றிருப்பது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: dailyworld.in I Archive
2020 ஆகஸ்ட் 5ம் தேதி dailyworld.in என்ற இணையதளம் வெளியிட்டிருந்த செய்தியில் இந்த புகைப்படம் இருந்தது. அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவையொட்டி அமெரிக்காவின் கேபிட்டல் முன்பு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இந்தியர்கள் என்று அதில் குறிப்பிட்டிருந்தனர். மேலும், இந்த புகைப்படத்தை பிடிஐ செய்தி நிறுவனம் எடுத்தது என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
இதன் அடிப்படையில் பிடிஐ இணையதளத்தில் தேடினோம். ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா, அமெரிக்கா கேபிட்டல் என சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடியபோது பிடிஐ செய்தி நிறுவனம் இந்த புகைப்படத்தை வெளியிட்டிருப்பது நமக்குக் கிடைத்தது.

இதன் மூலம் 2020 ஆகஸ்ட் மாதம் எடுக்கப்பட்ட படத்தை, 2021 ஜனவரியில் அமெரிக்கா நாடாளுமன்றத்தில் நடந்த கலவரத்தின் போது எடுக்கப்பட்டது என்று தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது.
முடிவு:
அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா சமயத்தில் எடுக்கப்பட்ட படத்தை, அமெரிக்க நாடாளுமன்ற முற்றுகையின் போது எடுக்கப்பட்டது என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரணஸ்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:அமெரிக்க நாடாளுமன்றம் முற்றுகை என்று பகிரப்படும் பழைய படம்!
Fact Check By: Chendur PandianResult: False
