
நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மற்றும் அவர்களது குடும்பத்தினர் குடும்பத்தோடு ஜாமீன் பெற்று நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மறுமகள் ஶ்ரீநிதி, பேத்தி உள்ளிட்டோர் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நம்ம கார்த்திக் சிதம்பரம் குடும்பத்தோட பீக்னிக் போறாருனு நினைக்காதீங்க…… அம்பூட்டு பேரும் ஜாமீன் வாங்கிட்டு கோர்ட்டுல இருந்து வராங்க…… இதுல என்ன விசேசம்னா அந்த கிழவிக்கு மட்டும் இரண்டு ஜாமீன் ஒரு முன் ஜாமீன்……” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Selva Kumar என்பவர் 2021 ஜனவரி 13ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கார்த்தி சிதம்பரம் குடும்பத்தினர் மீது 2014ம் ஆண்டு மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த சூழலில், குடும்பத்தோடு ஜாமீன் பெற்று நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த கார்த்தி சிதம்பரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், கார்த்தி சிதம்பரம் மகளும் உள்ளார். எனவே, இந்த படம் உண்மையில் ஜாமீன் பெற்று வெளியே வந்தபோது எடுத்த படமா என்று ஆய்வு செய்தோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, 2013ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்த போது நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதை பார்க்க அவரது குடும்பத்தினர் நாடாளுமன்றத்திற்கு வந்தபோது எடுத்த படம் என்று தி இந்து பிசினஸ் லைன் இந்த படத்தை வெளியிட்டிருந்தது. 2013 பிப்ரவரி 28ம் தேதி இந்த படம் வெளியிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: thehindubusinessline.com I Archive
இதன் மூலம் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்த கார்த்தி சிதம்பரம் குடும்பத்தினர் என்ற தகவல் தவறானது என்பது உறுதியானது.
படத்தில் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள மூதாட்டி யார் என்று ஆய்வு செய்தோம். அவர் பற்றிய எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. ப.சிதம்பரம் அல்லது நளினி சிதம்பரத்தின் தாயாராக இருக்கலாம். அல்லது கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஶ்ரீநிதியின் தாயாராகவும் இருக்கலாம் என்பதால் அதுபற்றி ஆய்வு செய்தோம். ப.சிதம்பரத்தின் தாயார் 2013ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி காலமானார். அதாவது, ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுவதற்கு முன்பாகவே அவர் இறந்துவிட்டார்.
நளினி சிதம்பரத்தின் தாயார் சௌந்தரா கைலாசம் இந்த புகைப்படம் எடுப்பதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பு அதாவது 2010ம் ஆண்டு அக்டோபரில் இறந்தார் என்ற செய்தி கிடைத்தது.
ஶ்ரீநிதி தன் தாயாருடன் இருக்கும் புகைப்படங்கள் நமக்குக் கிடைத்தன. அதில் இருப்பவரும், புகைப்படத்தில் இருப்பவரும் ஒருவர் போலவே உள்ளது.

கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படும். கைது செய்வதற்கு முன்பு முன்ஜாமீன் வழங்கப்படும். அப்படிப் பார்க்கும்போது ப.சிதம்பரம் குடும்பத்தில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மட்டுமே கைது செய்யப்பட்டனர். பெண்கள் யாரும் கைது செய்யப்பட்டதாக செய்தி இல்லை. சாரதா சிட் ஃபண்ட் வழக்கில் நளினி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. நளினி சிதம்பரத்தை வட்டமிட்டு காட்டுவதற்கு பதில் யார் நளினி சிதம்பரம் என்று தெரியாததால் மூதாட்டி மீது வட்டமிட்டு காட்டியிருக்கலாம் என்று தெரிகிறது.
இதை உறுதி செய்ய கார்த்தி சிதம்பரத்தை தொடர்புகொள்ள முயன்றோம். நம்முடைய அழைப்பை அவர் ஏற்கவில்லை. அவருடைய வாட்ஸ்அப் எண்ணுக்கு இந்த புகைப்படம் மற்றும் விவரத்தை தெரிவித்துள்ளோம். அவர் விளக்கம் அளித்தால் அதை வெளியிடத் தயாராக உள்ளோம்.
நம்முடைய ஆய்வில் இந்த புகைப்படம் கார்த்தி சிதம்பரம் தன் குடும்பத்தினருடன் நீதிமன்றத்தில் ஜாமீன், முன்ஜாமீன் பெற்று வெளியே வந்தபோது எடுத்த படம் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கார்த்தி சிதம்பரம் குடும்பத்தினர் நாடாளுமன்றத்துக்கு சென்ற புகைப்படத்தை நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்தபோது எடுத்த படம் என்று தவறாக குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதைத் தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:கார்த்தி சிதம்பரம் குடும்பத்தோடு ஜாமீன் பெற்று நீதிமன்றத்தில் இருந்து வெளியே வரும் படமா இது?
Fact Check By: Chendur PandianResult: False
